ஸ்டெர்லைட் தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு 

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்  நிராகரித்து விட்டது.
ஸ்டெர்லைட் தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு 

புது தில்லி:  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்  நிராகரித்து விட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது.

ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு,  ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மனு மீதான விசாரணையின் பொழுது காற்று, நீர் மாசு ஏற்படுத்தாத வகையில் ஆலை செயல்படுவதாகவும், விதிகள் மீறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், ஆலை மூடப்பட்டதால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையானது கடந்த வியாழனன்று பசுமைத் தீர்ப்பாயத்தில், அதன் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் நடைபெற்றது. அப்பொழுது ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் மிக முக்கியமான நிர்வாகக் கோப்புகள் மற்றும் கணிப்பொறிகள் ஆகியவை ஆலையின் வளாகத்தில் உள்ளன. எனவே அவற்றைக் கையாளும் பொருட்டு குறைந்த பட்சமாக 30 நாட்களாவது ஆலை செயல்பட அனுமதிக்க வேண்டு என்று கோரிக்கை வைத்து வாதாடினார்.

ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆலையின் செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான முக்கியமான கோப்புகளை அவர்கள் அழித்து விடக் கூடும் என்ற வாதம் அரசுத் தரப்பில் முன்வைக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோயல் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்து உத்தரவிட்டார். ஆனால் அதே சமயம், கண்டிப்பாக எந்த விதமான உற்பத்தி பணிகளும் நடைபெறக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் கடந்த ஞாயிறன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவினை அவசர வழக்காக கருதி விசாரிக்க தமிழக அரசின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம்  நிராகரித்து விட்டது.

தமிழக அரசின் மனுவானது வெள்ளியன்று விசாரணைக்கு வந்த பொழுது நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிர்வாக அதிகாரிகள் செல்லலாம் என்று அனுமதியளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச  நீதிமன்றம் மறுத்து விட்டது.     

அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிரான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்து நடைபெறலாம் என்றும்,.அங்கு தமிழக அரசின் சார்பில் வாதங்களை மீண்டும் எடுத்து வைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com