தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் கைது!

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. 
சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள்.

சென்னை: தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக அதன் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. 

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள், இந்த மறியல் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டுள்ளது. 

ஒவ்வொரு பகுதியிலும் ஒருவர் ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். எழும்பூரில் கனிமொழி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதில் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் சென்று கொண்டே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீஸா கைது செய்துள்ளது.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருகிறார்கள். தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் மெரீனா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com