சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ இன்று வெளியானது ஏன்? எப்படி? என்று சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணிப்பதற்கு 68 நாட்களுக்கு முன்பு பேசிய ஆடியோ இன்று ஊடகங்களில் வெளியானது. அவர் மரணம் அடைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இன்று ஆடியோ வெளியானது பல கேள்விகளை எழுப்புகிறது.
இது குறித்து விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை நடத்தி வரும் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் வைத்திருந்தார். அதனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு கடந்த ஜனவரி மாதமே ஒரு ஆதாரமாக தாக்கல் செய்தும், அதனை ஆணையம் ஏற்று கொண்டு பதிவு செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், இன்றைய குறுக்கு விசாரணையின் போது அந்த ஆடியோவை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு போட்டுக் காண்பித்தோம். விசாரணை ஆணையம் அதனை பதிவு செய்து கொள்ளாததால், அதனை வெளியிட்டிருக்கிறோம். இதில் வேறு எந்த பின்னணியும் இல்லை என்று கூறியுள்ளார்.