தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், அங்கு செல்வதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியில் சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.