மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கனமழை பெய்த போதிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கையில் குடையுடன் வந்து சிற்பங்களை கண்டு ரசித்தனர்.
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து கற்சிற்பங்களை கண்டுகளிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து மாமல்லபுரம் , செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை தொடங்கி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மதியம் வரை கனமழை பெய்தது. மதியத்துக்கு மேல் வானம் வெளுத்து வெயில் அடித்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கொட்டும் மழையிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கையில் குடைகளுடன் வந்து அருச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.