பாட வந்த நடிகைகளில் ரம்யா நம்பீசன் பெரும் கவனம் பெற்றவராகத் திகழ்கிறார். "பாண்டிய நாடு' படத்துக்காக இவர் பாடிய "பை பை பை கலாச்சி பை...' பெரும் ஹிட்டடித்தது. இதையடுத்து தற்போது "கூத்தன்' படத்துக்காக மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். "காட்டுமிராண்டி...' எனத் தொடங்கும் இப்பாடலை சூப்பர் சிங்கர் ஹரிஹரசுதனுடன் இணைந்து பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணை நடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது. ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீஜீதா, கிரா மற்றும் சோனா மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நாகேந்திர பிரசாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெங்கி இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். பாலாஜி இசையமைக்கிறார். "பல மொழிகளில் பாடியிருந்தாலும், தமிழில் பாடுவதை பெரிதும் விரும்புகிறேன். ஏனென்றால் தமிழ் உச்சரிப்பு எனக்குப் பிடித்தமானது. இப்பாடலை பல முறை பாடிப் பார்த்த பின் ஒலிப்பதிவில் பாடினேன். தொடர்ந்து பாடல் பாடும் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்'' என்றார் ரம்யா நம்பீசன்.