முத்து சன்னதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மல்லி. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு தீக்ஷித் நடிக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக தேஜுஸ்ரீ நடிக்கிறார். அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ், அம்சவேலு உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த தாஸ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் வெங்கி நிலா. காதல்தான் கதையின் பிரதானம். ஒரு சில திகில் சம்பவங்களை உள்ளடக்கியதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாசமும், நேசமுமான காதலை எதிர்க்கிறது ஊர் கட்டுமானம். ஜாதிய அச்சுறுதலுக்கு பயந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் தஞ்சம் அடைகிறது காதல் ஜோடி. வனப்பகுதியை விட்டு வெளியே வர முடியாத சூழலில், அங்கிருந்து பழமையான ஒரு பங்களாவிற்குள் நுழைகிறார்கள் காதலர்கள். அனுமாஷ்யங்கள் நிறைந்த அந்த பங்களாவிற்குள் நடக்கும் சம்பவங்களை பரபரப்பாக சொல்லுவதே கதை. பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய சுவாரஸ்யங்கள் திரைக்கதையின் பலமாக அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் படமாக்கப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் மைசூர் உள்ளிட்ட இடங்களிலும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.