ஒரு காலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும், அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது "குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் "ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை. யூ டியூப் எங்கும் நிறைந்து கிடக்கும் குறும்படங்களில் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இடம் பெறுவதுதான் இதில் சிறப்பு. இந்த வரிசையில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் "ஸ்டாம்ப் ஆல்பம்' சிறுகதையை குறும்படமாக இயக்கி வரவேற்பை பெற்றுள்ளார் சிவகுமார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குறும்பட அனுபவம் பற்றி பேசியதிலிருந்து... "எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் "ஸ்டாம்ப் ஆல்பம்' சிறுகதை என்னை பாதிப்புக்குள்ளாகி இருந்தது. ஸ்டாம்ப் சேகரிக்கும் குழந்தைகளின் உலகத்தையும், அதை பின்புலமாக கொண்ட கதையையும் வைத்திருப்பார் சுந்தர ராமசாமி. ஸ்டாம்ப் சேகரிக்கும் குழந்தைகளை பற்றி உலகளவில் எந்த படமும் வெளிவந்ததில்லை. உலக வரலாற்றையே தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புண்டு. அதன் பின்னணியில் இரண்டு நண்பர்களின் போட்டி, பொறாமைதான் கதை. இதை சிவா பவுண்டேஷன் மூர்த்தி தயாரிப்பில் இயக்கி முடித்திருக்கிறேன். ஹைதராபாத் பட விழாவில் சிறந்த குறும்படமாக இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடுவர் விருதையும் பெற்றுள்ளது பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள மும்பை பட விழாவிலும் இப்படம் கலந்து கொள்ளவுள்ளது''.