* சர். சி.வி. ராமன் திருமணத்திற்காக பெண் பார்க்க சென்றபோது அவரது மனைவி லோகசுந்தரி பாடிய பாடல், தியாகராஜரின் "ராம நீ சமானமெவரு' என்கிற கரகரப்பிரியா
ராக கீர்த்தனை.
* எழுத்தாளர் நா. பார்த்தசாரதி பொருளாதார இடர்ப்பாடுகளால் தான் நடத்தி வந்த "தீபம்' இலக்கிய இதழை நிறுத்திவிட முடிவெடுத்தபோது, ஒரு வாசகி தனது இரண்டு தங்க வளையல்களை அனுப்பி பத்திரிகையை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நா.பா. பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தினார்.
* இலஞ்சி முருகன் கோயிலில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி.யின் மணிவிழாவில் கலந்து கொள்ள ஈ.வெ.ரா பெரியார் கிளம்பியபோது சிலர் "நீங்கள் கோயிலுக்குப் போகலாமா' என்று கேட்க, பெரியார், "மணிவிழா முருகனுக்கா நடக்குது? முதலியாருக்குத்தானய்யா வாங்க' என்று கூறி புறப்பட்டார்.
* தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் தனது குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் எழுதியபோது குருநாதரை "ஆசிரியப்பிரான்' என்றே எல்லா இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார். ஓர் இடத்தில் "மீனாட்சிசுந்தரம் என்று பெயரிட்டார்கள்' என்று குறிப்பிட்டுவிட்டு அடிக்குறிப்பாக "ஆசிரியப்
பிரானை இவ்வாறு பெயர்க்குறிப்பிட்டெழுத என் உள்ளம் நடுங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
* படத்தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர் தனது முதல்படத் தயாரிப்பின்போது ஒரு வங்கியில் கணக்குத் தொடங்கினார். மறுநாள் அவர் பணம் எடுக்கப் போனபோது வங்கியில் எளிதில் பணத்தை எடுக்கமுடியாதபடி அவரிடம் கேள்விமேல் கேள்வி கேட்டதால் வெறுத்துப்போன தேவர் வங்கிக்கணக்கையே முடித்துக்கொண்டுவிட்டார். அதன்பின் அவருடைய பண பரிவர்த்தனை அனைத்துமே ரொக்கமாகத்தான்.
-ஆர்கே.