இன்று பரபரப்பான ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி குறும்படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். விஜய் சேதுபதி வழியில் கோடம்பாக்கத்தில் கால்பதிக்கிறார் அஜித் கௌரவ். கூத்துப்பட்டறை தொடங்கி அனைத்து வித பயிற்சிகளுடன் களம் காண்கிறார் அஜித் கௌரவ்.
""நான் படித்தது பி.இ. சிவில் இன்ஜினியரிங். நடிப்பில் ஆர்வம் வந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். முறைப்படியாக நடிப்பு கற்றுக்கொள்ள நினைத்தேன். போரூரில் உள்ள கத்துக்குட்டி கலைக்கூடம் பயிற்சி பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். கூத்துப்பட்டறை முத்துசாமியிடம் மாணவராக இருந்த வினோத் நடிப்பு சொல்லிக்கொடுத்தார். இயக்குநர் கோப்குமார் இயக்கத்தில் நடிக்கிறேன். படத்தின் பெயர் "கமலோகா'. அதாவது வான்வெளிக்கும் பூமிக்கும் இடையே உள்ள கற்பனை உலகம்தான் அது. இந்திய அரசாங்கம் தற்கொலை தடைச் சட்டத்தை மேலாய்வு செய்து அதன்மீது இருக்கும் தடையை நீக்கி தீர்ப்பு வழங்கியதாக ஒரு கற்பனை. அதன்படி யாராவது தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தால் அவர்களை தயவுகேட்பு முறைப்படி சாகடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியை ஒரு தனியார் அமைப்புக்கு வழங்கியுள்ளது. தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யவும். தற்கொலை செய்ய முடிவு செய்பவர்களுக்கு இருக்கும் கடன் சுமைகளை அரசே ஏற்றுக் கொள்ளும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக படம் துவங்கும். ஹீரோ என்பதை தாண்டி சினிமா மாறி வந்திருக்கிறது. எனக்கு ஏற்ற எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்'' என்றார் அஜித் கௌரவ்.