சி.பி.எஸ். பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் "களிறு'. அண்மை காலமாக காதலை முன் வைத்து நடந்து வரும் ஆணவக் கொலைகளை பின்னணியாகக் கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவில், பரவலாக ஆணவக் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. விஞ்ஞான, அறிவியல் புரட்சி என ஒரு பக்கம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் மதிப்பை வெளியுலகில் குறைப்பதாக உள்ளது. இதன் கொடுமைகளை எடுத்துரைக்கும் விதமாக இதன் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. களிறு என்பது ஆண் யானையைக் குறிக்கும். கலிங்கத்துப்பரணியில் போரில் தாக்கப்படும் களிறு, தன்னைத் தற்காத்துக் கொள்ள மூர்க்கத்தனமாக என்ன வேண்டுமானாலும் செய்வதை வர்ணனைகளில் அறிய முடியும். ஆணவக் கொலைகளில் புகுந்துள்ள அரசியலை இப்படம் தோலுரிக்கிறது. ஜி.ஜே.சத்யா எழுதி இயக்குகிறார். விஷ்வக், அனுகிருஷ்ணா, நீரஜா , தீபா ஜெயன் உள்ளிட்ட புதுமுகங்கள்
நடிக்கின்றனர்.