கனவுக்கன்னி என்றும் கவர்ச்சிக்கன்னி என்றெல்லாம் 1940-களில் திரையுலகமும் ரசிகர்களும் போற்றிப் புகழ்ந்த நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, தன் தம்பிகளின் முன்னேற்றத்திற்காக, திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர். இவர் தன் தம்பிகள் மீது வைத்திருந்த பாசத்தைப்பற்றி கவியரசர் கண்ணதாசன்,ஒரு வார இதழில் இப்படி எழுதியிருந்தாராம்.
"முதல் தம்பி டி.ஆர்.ராமண்ணாவைத் திரைப்படத் தயாரிப்பாளர்-இயக்குநர் ஆக்கினார். தியாகராய நகரில் தன் பெயரிலிருந்த திரைப்பட அரங்கை இரண்டாவது தம்பி டி.ஆர்.சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார். மூன்றாவது தம்பி டி.ஆர்.பார்த்தசாரதியைச் சட்டம் பயில வைத்தார். இவர்களுக்கெல்லாம் திருமணம் செய்வித்து அனைவரையும் ஒரே கூட்டுக் குடும்பமாகத் தன் பார்வையில் வைத்துக் கொண்டார். தன் ஒரே தங்கையான டி.ஆர்.சேதுலக்ஷ்மியை டி.ஏ.மதுரத்தின் தம்பி,பி.ஏ.ஞானத்திற்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
தம்பிகளுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்தவர் டி.ஆர்.ராஜகுமாரி என்று எழுதிய கண்ணதாசன், "தனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் ராஜகுமாரியின் தம்பியாகப் பிறக்கவேண்டும்' என்று முடித்திருந்தாராம்.
(20-ஆம் நூற்றாண்டின் சாதனையாளர்கள்
புத்தகத்திலிருந்து.)
-திருநீலக்குடி மா.உலகநாதன்