திருவள்ளுவரின் திருவுருவத்தை வரைந்த கே.கே.வேணுகோபால் சர்மாவின் புதல்வர் வே.ஸ்ரீராம் சர்மா. இவர், மறைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் வரலாற்றை "வீரத்தாய் வேலுநாச்சியார்' எனும் நாட்டிய நாடகமாக கடந்த 2011-இல் வடிவமைத்தார். இதை அரங்கேற்றும் வாய்ப்புக்காக காத்திருந்தபோது, தனது செலவில் நாட்டிய நாடகத்தை தயாரித்து அரங்கேற்ற முன்வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதுவரை, தமிழகத்தில் 3 பல்கலைக்கழகங்கள் உட்பட 12 மேடைகளில் அரங்கேற்றம் கண்டிருக்கிறது இந்த நாடகம். கடந்த 9-ஆம் தேதி சென்னை நாரதகான சபாவில் மீண்டும் அரங்கேற்றப்பட்டது. விஷால், நாசர், விஜயகுமார், பார்த்திபன், விவேக், தம்பி ராமையா, பொன்வண்ணன், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரைத்துறையினர் பலரையும் நாடகம் பார்க்க பிரத்யேகமாக அழைத்திருந்தார் வைகோ. நிகழ்ச்சியின் நிறைவாக வைகோ பேசும் போது, ""வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றை கண்ணகி ஃபிலிம்ஸ் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்கிறது. அதற்குத் திரைத்துறையினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பணம் சம்பாதிக்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. மீட்டெடுக்கப்பட்ட நம் வீர வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்வதற்காகத்தான் இம்முயற்சியில் இறங்கியிருக்கிறோம்'' என்றார். நாடகத்தை இயக்கிய ஸ்ரீராம் சர்மாதான் திரைப்படத்தையும் இயக்குகிறார். 2018-ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு கதை - வசனம் எழுதுபவரும் வைகோ.