பதினான்கு வயதாகும் யாஷா அஸ்லே இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாணவராக மட்டுமின்றி, பேராசிரியராகவும் பணியாற்றிவருகிறார். பதினான்கு வயதில் யாஷா அஸ்லே பேராசிரியராகப் பணி புரிவதால், உலகிலேயே இளம் வயது பேராசிரியர் என்ற பெருமையும் யாஷா அஸ்லேக்கு சேர்ந்துள்ளது.
இதுகுறித்து யாஷா அஸ்லே கூறுவதாவது:
"கணிதத்தில் எனக்கிருக்கும் ஞானத்தைப் பற்றி எனது தந்தைக்கு ரொம்ப பெருமை. அவர், லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளிடம் சென்று, எனக்கிருக்கும் கணித ஞானம் பற்றி சிலாகித்துச் சொன்னார். . ஆரம்பத்தில் அப்பா சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விடா முயற்சியுடன் தொடர்ந்து பல்கலைக் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து வந்தார். இப்படி பதிமூன்று முறைகள் பல்கலைக்கழகம் சென்று வந்தார்.
அப்போதுதான் பல்கலைக் கழகம் கொஞ்சம் மனமிரங்கியது. எனது கணித அறிவை அறிஞர்கள் குழு பரிசோதித்தது. அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் திருப்தியடையும் வரையில் பதிலையும் விளக்கத்தையும் அளித்தேன். கணித அறிஞர்கள் குழு எனது விளக்கத்தைக்கேட்டு பிரமித்துப் போனது.
உடனே பேராசிரியராக என்னை நியமனம் செய்ய பரிந்துரைக்க... நானும் பேராசிரியராக நியமிக்கப் பட்டேன். பேராசிரியர் வேலைக்குச் சேர்ந்து ஓர் ஆண்டாகிறது. இந்த ஆண்டு கணிதத்தில் ஹானர்ஸ் முடித்துவிட்டு, "பிஎச் டி' செய்ய பதிவு செய்துள்ளேன். வெகு விரைவில் ஆராய்ச்சியைத் தொடங்குவேன்... மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதும் தொடரும். பல்கலைக் கழகத்தில் மாணவர்களும் சரி.. ஆசிரியர்களும் சரி.. அலுவலர்களும் சரி... என்னை "வயதில் சிறியவன்' என்று நினைக்காமல், நட்புடனும் மரியாதையுடனும் பழகுகிறார்கள்'' என்கிறார் யாஷா அஸ்லே. யாஷா ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
-பிஸ்மி பரிணாமன்