தெரிந்த பெயர், தெரியாத விவரம்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா-வண்டலூர் 

சென்னையின் தெற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. 
தெரிந்த பெயர், தெரியாத விவரம்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா-வண்டலூர் 

* சென்னை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விரும்பி செல்லும் இடம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும்.  சுமார் கால் நூற்றாண்டுகளாக இப்போதும், எப்போதும் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்ந்து பரவசமூட்டும் இடமாக இருந்து வருகிறது.  இந்தப் பூங்கா குறித்து அறிந்தும் அறியாத சில விஷயங்களை பார்க்கலாம்.

* சென்னையின் தெற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. 

* 1855-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மியூசியம் இயக்குநராக இருந்த எட்வர்ட் கிரீன் பால்ஃபர் என்பவரின் முயற்சியால் சுமார் 300 மிருகங்களுடன்  "மெட்ராஸ் மிருகக் காட்சி சாலை' என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட்டில் அமைத்தார்கள். 

* ஏறத்தாழ 116-ஏக்கர் பரப்பளவில் PEOPLE’S PARK என்று அழைக்கப்பட்ட பகுதியில் இந்த ‘MADRAS ZOO’ இயங்கி வந்தது.  பல கருப்பு-வெள்ளை திரைப்படங்களின் பாடல் காட்சிகள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் "மை லேடீஸ் கார்டன்' என்ற பூங்காவும் இருந்தது.  

* 1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது குண்டு வீசப்பட்டதில் இங்கிருந்த பல விலங்குகள் இறந்தன. 1944-இல் பூங்கா புதுப்பிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்காக மிருகக் காட்சி சாலை பற்றிய ஆவணப் படத்தை திரைப்பட இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் எடுத்துக் கொடுத்துள்ளார். 

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் விரிவாக்கம் காரணமாக,  இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டு, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் "அண்ணா உயிரியல் பூங்கா' என்ற பெயரில் 1985-ஆம் ஆண்டு ஜூலை 24 -ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

* இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.

* வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 170 வகையிலான 2200 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

* பாலூட்டிகள் 430, பறவைகள் 534, ஊர்வன 351, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை 72, மீன்வகைகள் 265 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

* சிங்கம், புலி, சிறுகத்தை, கருஞ்சிறுத்தை,கரடி, நீர் யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவறி விடவே கூடாது.

* அது மட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. 

* 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும்.

* தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் வருவதுண்டு. 

* பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை நடந்து சென்று பார்க்க இயலாதவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பேட்டரி கார் வசதியும் உண்டு.

* கோடைக் காலங்களில் பூங்காவில் இருக்கும் யானைகளுக்கு குளு குளு ஷவர் குளியல் கொடுக்கப்படும். அதனை பார்ப்பதற்காகவே மே, ஜூன் மாதங்களில் ஏராளமான குழந்தைகள் பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

* அண்ணா உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். வாரந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு விடுமுறை.

* நுழைவுக் கட்டணமாக சிறுவர் சிறுமியர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

* ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. கொண்டு செல்லும் உணவுகளை அமர்ந்து சாப்பிட வசதிகளும் உண்டு. 
-ஆர்.ஜி.ஜெகதீஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com