இப்போது சிந்துவுக்கு ஒரு பிரமோஷன். வெள்ளி மங்கை என்பதிலிருந்து தங்க மங்கையாக உயர்ந்திருக்கிறார். சர்வதேச அளவில் நடந்த போட்டி ஒன்றில் சிந்து தங்கப் பதக்கம் வாங்குவது இதுதான் முதல் தடவை.
சமீபத்தில் தென் கொரியாவின் தலைநகரான சியோல் நகரில் நடந்த, கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் பெற்றதினால் தங்கப் பதக்கம் வென்று "தங்க மங்கை'யாகி இருக்கிறார். இந்தப் பட்டத்தை கைப்பற்றும் முதலாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் பி.வி.சிந்து படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் சென்ற ஆகஸ்ட் மாதம் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நோஸோமி ஒக்குஹாராவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில்
சிந்து கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அனல் பறக்க அபாரமாக ஆவேசமாக ஆடி, நோஸோமி ஒக்குஹாராவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை
வென்றிருக்கிறார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் நோஸோமி ஒக்குஹாராவின் ஆவேச வீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட சிந்து ஓரிரு முறை கால் இடறி கீழே விழுந்த்தார். அந்த அளவுக்கு போட்டி பலமாக இருந்தது. சிந்துவின் இந்த தடுமாற்றங்கள் சிந்துவின் வெற்றியைக் கேள்விக்
குறியாக்கியிருந்தது. சிந்துவின் கோச்சிற்கும், பார்வையாளர்களுக்கும் பதட்டம், மன அழுத்தம் எகிறியது. முதல் சுற்றில் வெற்றி பெற்ற சிந்து,
இரண்டாவது சுற்றில் தோல்வியுற்றாலும், சிலிர்த்து எழுந்து களத்தை கையடக்கி அட்டகாச வீச்சுகளினால் தனது ஆளுமையை நிலைநிறுத்தி
ஒக்குஹாராவைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
யாருமே எதிர்பார்க்காத நிலையில், தனது வெற்றியை பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி சமர்ப்பணமும் செய்தார். இந்த செய்தியும் சிந்துவைப்
பொருத்தமட்டில் பெரிய விளம்பரமாக அமைந்தது.
யாரிடம் தோல்வி அடைந்தாரோ அவரை சிந்து எப்படி தோற்கடித்தார்.. வெள்ளியிலிருந்து தங்கப் பதக்கத்திற்கு முன்னேறியது குறித்து சிந்து சொன்னது:
"ஸ்காட்லாந்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் நோஸோமி ஒக்குஹாராவிடம் இரண்டு புள்ளிகளில் வெற்றியைப் பறிகொடுத்தேன். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். தோல்வியை தலையில், மனதில் ஏற்றி துவண்டுவிடவும் கூடாது. வெற்றி பெற்றுவிட்டோம் என்று அதீத நம்பிக்கையில் மிதக்கவும் கூடாது. இதை நான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
அதனால், நோஸோமி ஒக்குஹாராவிடம் தோல்வி அடைந்ததை அப்போதே மறந்துவிட்டேன். "அடுத்தது என்ன என்று அதில் கவனம் செலுத்து' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இறகுப் பந்தை எதிராளியின் மேல் அதிரடியாக எப்படி இறக்க வேண்டும் என்பதில் என் பயிற்சி அமைந்திருந்தது. எனது சிந்தனையில் அது மட்டுமே வியாபித்திருந்தது. இனி, யாருடன் விளையாடினாலும் எதிராளியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்''.
சிந்துவின் வெற்றிகளின் எண்ணிக்கை கூடக் கூட சிந்து விளம்பரங்களில் தோன்றுவதற்கான தொகையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. விராட் கோலி, எம் எஸ். தோனிக்கு அடுத்தபடியாக விளம்பரங்களில் தோன்ற அதிக ஊதியம் வாங்குவது சிந்து மட்டுமே..!,
தொடக்கத்தில் ஒரு விளம்பரம் என்றிருந்தது. இப்போது சிந்து பதினோரு நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருக்கிறார். ஊதியமும் தொடக்கத்தில்
இருந்ததைவிட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறதாம்..!
சிந்துவைப் பொருத்த மட்டில் அவருக்கு வயது இருபத்திரண்டுதான் ஆகிறது. அதுதான் அவரது பிளஸ் பாயிண்ட். குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு
இறகுப் பந்தாட்டத்தை ஆளப்போகிறார்.
நாளை (25.9.2017 ) டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பெண்களுக்கான இறகுப் பந்தாட்டப் போட்டியில், சிந்து கொரியா ஓபன் கால் இறுதி போட்டியில் தோற்கடித்த ஜப்பானின் மினட்சு மிதானியுடனும், இறுதி போட்டியில் தோற்கடித்த நோஸோமி ஒக்குஹாராவுடனும் மோதுவார். ஆக.. சரியான சவாலான போட்டி மீண்டும் அரங்கேறவிருக்கிறது.
-பிஸ்மி பரிணாமன்