தெலுங்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் "சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு'. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இப்படம், வசூல் ரீதியாக பல சாதனைகளை முறியடித்தது. தெலுங்கு திரையுலகமே அதிசயிக்கும் விதமாக இதன் வசூல் பார்க்கப்பட்டது. குடும்பம், உறவுகள், சென்டிமெண்ட், காதல் என கமர்ஷியல் படங்களுக்கான அத்தனை அம்சங்களும் உள்ளடக்கியதால், தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தனர். இந்தப் படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா நிறுவனத்தின் சார்பில் மெஹபு பாஷா இப்படத்தை தயாரிக்கிறார். தமிழில் "நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அஞ்சலி, சமந்தா, பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிக்கி ஜே.மேயர் இசையில் அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர். இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா.