"லட்சுமி', "மா' உள்ளிட்ட குறும்படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் சார்ஜுன். இணையதளங்களில் வெளியான இந்த குறும்படங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியது. தற்போது அந்த குறும்படங்களின் மூலம், வெள்ளித்திரையில் படம் இயக்கும் வாய்ப்பு இயக்குநருக்கு கிடைத்துள்ளது. படத்தில் நடிக்க போவது நயன்தாரா. சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை ஏற்கெனவே இயக்கி வரும் இவர், அடுத்து நயன்தாரா நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். "அறம்' மற்றும் "குலேபகாவலி' படங்களின் தயாரிப்பாளரான ராஜேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. அனுமாஷ்ய சக்திகளின் பின்னணியை கதைக் களமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. சார்ஜுன் பேசும்போது... ""என் குறும்படங்களில் நயன்தாராவுக்கு பிடித்தது "மா'. அதைப் பற்றி என்னிடம் அவர் ஒருமுறை பேசியிருந்தார். அப்போதுதான் கதை இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். அப்போது சொன்ன கதைதான் இது. இப்போதுதான் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படம் திரைக்கு வந்ததும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்'' என்றார்.