மலைகளில் உயரமான மலை, நீளமான மலை, என்று கேள்விப்பட்டிருக்கிறோம். "வானவில் மலை' என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சீனாவில் கன்சு பகுதியில் இந்த வர்ண ஜாலங்கள் கடத்தும் மலைகள் உள்ளன. முழுக்க முழுக்க கனிமங்கள் நிறைந்த இந்த மலைகளைக் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடத்தை இந்த மலைகள் பிடித்துள்ளன.
சீன வானவில் மலைகளுக்குப் போட்டியாக பெரு நாட்டிலும் வானவில் மலைகள் உள்ளன.
இன்னொரு அற்புதம் வானவில் ஆறு.
இது கொலம்பியாவில் பாய்கிறது. ʻmacarenia clavigeraʼ வகை நீர் செடிகள்தான் இந்த ஆற்றிற்கு வானவில் நிறங்களைத் தருகின்றன. சுமார் 100 கி. மீ நீளமுள்ள இந்த ஆற்றை சுமார் 30 கி.மீ. வரை சென்று பார்க்க அனுமதி கிடைக்கும். மீதமுள்ள பகுதியில் கொரில்லா தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லை. அதன் காரணமாக 30 கி. மீ. தாண்டிப் போக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.
இந்த வானவில் ஆற்றிற்குப் போட்டியாக உலகில் வேறு எந்த நாட்டிலும் வானவில் ஆறு இல்லை.
இந்த உலக அற்புதங்களுக்குப் பொருத்தமான பதிலாக இந்தியாவிலும் ஒரு அதிசயம் இருக்கிறது.
கண்ணாடி நதியில் படகுகள் பயணிக்கும் போது நிலத்தில் இருந்து பார்த்தால் படகுகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல ஒரு மாயாஜாலம் நிகழும். அந்த அளவுக்கு அந்த நதி நீர், கண்ணாடி மாதிரி தெள்ளத் தெளிவாக இருக்கும். மேகாலயாவில் பாயும் உம்ங்கோட் நதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திருப்பது தனது கண்ணாடித் தன்மையினால்தான்.
இந்த இயற்கை அற்புதத்தைக் காண மேகாலயாவின் "டவ்கி' என்ற ஊருக்குப் போக வேண்டும். அஸ்ஸாமின் கெüஹாத்தி நகரத்திலிருந்து 175 கி.மீ தூரத்திலும், ஷில்லாங் நகரிலிருந்து 95 கி. மீ தூரத்திலும் "டவ்கி' அமைந்துள்ளது. படகுப் பயணம் செய்யும் போது ஆழத்தில் கிடைக்கும் மணல், கூழாங்கல்களை நேரில் பார்ப்பது போல பளிச்சென்று பார்க்கலாம். இங்கு படகுப் போட்டிகளும் நடக்கும். இங்கிருந்து, கூப்பிடு தொலைவில் தான் வங்கதேச எல்லை இருக்கிறது.