ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவுகிறதென்றால் அவ்வூரின் சுகாதாரம் அற்ற சூழலே காரணம். சூழல் அசுத்தமாக இருந்தால் நோய்கள் உண்டாகும் என்பது விதி, சுத்தமான சூழல் இருந்தால் நோய் உண்டாகாது என்பதும் விதி.
ஆபத்தான சூழலிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்வது நம் பொறுப்பு. அதாவது நமக்கு நடப்பதை விதியென்று நொந்து உட்காரக் கூடாது. அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும்.
நாமிருக்கும் இடத்தில் தீப்பற்றிக் கொண்டால், "சரி, இது நம் விதி' என்று நினைத்து அங்கேயே நாம் இருப்போமா?
நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடுவோமல்லவா?
நோய் வந்துவிட்டால் விதியென்று சும்மா இருக்கிறோமா? மருத்துவரைத் தேடி ஓடுகிறோமல்லவா?
நோய் எப்படி விதியோ; அப்படியே மருந்து என்பதும் விதியே.
உங்களுக்குத் துன்பம் நேர்ந்தால் விதியே என்று நொந்து கொண்டு சும்மா இருக்காதீர்கள். அதிலிருந்து வெளியேறுவதற்கென்று ஒரு விதி இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.
அதாவது விதியை விதியால்தான் வெல்ல முடியும்.
கவிஞர் அப்துல் ரகுமான் எழுதிய
"முத்துக் குளிக்க வாரீகளா?' என்ற நூலிலிருந்து...