மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள், தற்போது சட்டங்களைக் கரைத்து குடித்து மனிதர்களுக்காகவே வழக்காடும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளன.
ஆம், லண்டனைச் சேர்ந்த 20 வயது மாணவரான ஜோஸ்வா பௌரடர் "உலகின் முதல் ரோபோ வழக்குரைஞர்' தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.
சாதாரண வழக்குரைஞரைப்போல் இந்த ரோபோ, நீதிமன்றப் படிகளை ஏறியோ அல்லது வாய்தா பெற்றோ செயல்படுவதில்லை. சாமானியனின் சட்ட குரலாக ஒலிக்கும் இந்த ரோபோவுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
"டுனாட் பே' என்ற இணையதளத்திற்குச் சென்றால்போதும், இந்த ரோபோ வழக்குரைஞரை தொடர்பு கொள்ளலாம். அந்தப் பக்கத்தில் நமது சட்ட பிரச்னையை டைப் செய்துவிட்டு, அதன் பின்னர் வரும் கேள்விகளுக்கு ஒற்றை வரி பதில்களை அளித்தால் போதும்.
சட்டப் பிரச்னைக்கான இலவச ஆலோசனைகளை வழங்குவது மட்டுமின்றி புகார் மற்றும் சட்ட ஆவணத்தை தயாரித்து சம்பந்தப்பட்ட துறைக்கே அனுப்பி வைத்துவிடுகிறது இந்த ரோபோ வழக்குரைஞர்.
வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸார் அளிக்கும் சலான்களை இந்த ரோபோ சட்ட நடவடிக்கை மூலம் தீர்வு கண்டுள்ளது. அமெரிக்கா, சியாட்டில், லண்டன் ஆகிய நகரங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தியதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்ட சலான்களை ரத்து செய்து அசத்தி உள்ளது, அதுவும் இலவசமாக.
கிரெடிட் கார்டு பிரச்னை, வாடகைதாரர்கள் பிரச்னை, நுகர்வோர் குறைகள், குழந்தை பிறந்தால் தந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய விடுப்பு, பணியிடங்களில் ஏற்படும் பிரச்னை ஆகியவற்றுக்கு இந்த ரோபோ சட்டப்பூர்வமாகத் தீர்வு காண்கிறது.
இதுகுறித்து மாணவர் ஜோஸ்வா பௌரடர் கூறுகையில், "எனது வாகனத்துக்கு பல முறை போக்குவரத்து காவல் துறையினரிடம் தேவையற்ற சலான் பெற்றேன். அதற்கு தீர்வு காண சட்ட ஆலோசனைகளைப் பெற்று வந்தேன். அப்போதுதான் எனக்கு இந்த இலவச ரோபோ வழக்குரைஞரை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. பின்பு அதற்காக சட்ட நிபுணர்களின் உதவியுடன் இணையதளத்தை உருவாக்கினேன். விவாகரத்து, சொத்துப் பிரச்னை போன்ற பிரச்னைகளுக்கு இலவச சட்ட தீர்வு காண்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன். தற்போது சுமார் 1000 பிரச்னைகளுக்கு இலவச ரோபோ மூலம் தீர்வு காண்கிறேன். சட்டத் தீர்வு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்கிறார் ஜோஸ்வா பௌரடர்.
- அ.சர்ஃப்ராஸ்