சிலர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது உண்டு. ஆனால் அவர்கள் மேற்காசியாவில் உள்ள சாக்கடலில் போய் விழுந்தால் சாக மாட்டார்கள்.
மாறாக கடலில் மிதப்பார்கள். பெயர்தான் சாக்கடலே (Dead sea) தவிர, அது சாகடிக்காத கடல். அக்கடலில் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அதை செத்த கடல் என்ற பொருளில் அப்பெயர் வைத்துள்ளனர்...
சாக்கடலில் உப்பு அளவு அதிகம் என்பதால் அக்கடல்நீரின் அடர்த்தி அதிகம். ஆகவே இக்கடலில் குளிக்க இறங்குவோர் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை. நீரில் மூழ்காமல் இருக்க இக்கடலில் நீந்த வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் இக்கடலில் மிதக்கலாம்...
மற்ற கடல்களில் சாதாரண உப்பு - சோடியம் குளோரைடுதான் அதிகம். ஆனால் சாக்கடலில் வேறு பல வகையான உப்புக்கள்தான் அதிகம் உள்ளன. சாக்கடல் நீர் நோய் போக்கும் பண்புகளைப் பெற்றுள்ளதற்கு அதுவே காரணமாகும். நோயாளிகளில் பலர் அதுவும் குறிப்பாக தோல் நோய் உள்ளவர்கள், சாக்கடலின் சேற்றை எடுத்து உடலில் பூசிக் கொள்கின்றனர். அந்தச் சேற்றில் மருத்துவ குணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
என்.ராமதுரை எழுதிய "அறிவியல் எது? ஏன்? எப்படி? - அடிப்படைகள் முதல் அதிசயங்கள் வரை' என்ற நூலிலிருந்து.