முக நூலிலிருந்து....
• அவளிடம் கேட்டேன்:
"நீ என் முழுமதியா,
இல்லை பிறை மதியா'' என்று.
அவள் சொன்னாள்:
"நான் உன் திருமதி'' என்று.
- குணாஜீ
• பேசாமலே இருந்துவிட்டால்..
அழிந்து போவது
மொழிகள் மட்டும் அல்ல...
உறவுகளும்தான்.
- தஞ்சை தவசி
• சில விஷயங்கள்
நம் காதை
எட்டாமல் போனால்...
எத்தனை நிம்மதி!
- நாச்சியாள் சுகந்தி
• சூட்கேஸுக்குக் கீழ ரெண்டு வீலைக் கண்டுபிடிச்சவன வியக்கேன். உண்மையிலேயே சக்கரத்தைக் கண்டுபிடிச்சவன் இருந்திருந்தான்னா, சங்க நெறிச்சுக் கொன்றிருப்பான்.
"ஏன்டா உருளுதுங்கறதுக்காக... இப்டியாடா தெருவுல போட்டுத் தேய்ப்பீங்க?'
பைக்கு பின் ஸீட்ல உக்காந்திருக்கற ஒரு வாகன ஜந்து, இன்னொரு வண்டியை "டோ' பண்றா மாதிரி கூட்டிட்டுப் போறான்.
இவிய்ங்களை எல்லாம் பைத்தியம் பிடிச்ச நாய் பல்லு வெளக்காமக் கடிச்சா தப்பே இல்ல.
- ஆத்மார்த்தி
• அவ்வளவு பேசியிருக்க வேண்டாம் அப்போது.
இவ்வளவு மௌனமாயிருக்க வேண்டாம் இப்போது!
- நேசமிகு ராஜகுமாரன்
சுட்டுரையிலிருந்து...
• உயர்ந்த விஷயத்தைச் சொல்வதே இலக்கியம் என எண்ணுவது
ஆரம்ப வாசகனின் அசட்டு நம்பிக்கை.
உயர்ந்த விஷயம் அப்படியொன்றும் உயர்வானதல்ல என்பதையும்,
உலகத்தால் தாழ்வாய் பார்க்கப்படுவது
எப்படி முற்றிலும் மோசமில்லை என்பதையும்
கடவுளின் பார்வையில் சொல்ல முனைவதே உயர்வான எழுத்து.
- விமலாதித்த மாமல்லன்
• காய்த்த மரத்தை விட்டு
கை நழுவும்
சுய நலவாதி...
பழங்கள்.
- ரேவதி
• "ஒரே ஒரு செருப்பு வாங்கி கொடுடா''என தன் விவசாயி அப்பா கேட்டபோது...
ஷூ போட்டிருந்த மகனுக்கு முள் குத்தியது...இதயத்தில்.
-சூர்ப்பனகை
• சுறுசுறுப்போடு
உழைப்பவர்களின் வலிமை
அதிகம் என்பதை...
எறும்பு கடிக்கும் போது
உணர்ந்து கொள்ளலாம்.
-அரவிந்த் ராஜா
வலைதளத்திலிருந்து...
குழந்தைகளை நினைக்கும்போதெல்லாம் என் மனத்தில் பாரதியாரின் முகம் எழுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே குழந்தைகளையும் மனைவியையும் தினமும் மாலை வேளைகளில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் பழக்கத்தை அவர் கடைபிடித்து வந்திருக்கிறார். குழந்தைகளோடு கடற்கரை மணலில் விளையாடுவதும் கடலலைகளையும் கட்டுமரங்களையும் பார்த்தபடி அவர்களுக்கு கதைகள் சொல்வதும் அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்களாக இருந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகள் விரும்பும் தாளக்கட்டில் அவர்கள் விரும்பிய கணத்தில் பாடல்கள் கட்டிப் பாடுவதையும் அவர் விளையாட்டுபோல செய்துவந்துள்ளார். அவரைப்போல குழந்தையை நேசிப்பவர்கள் மிகவும் குறைவு. அவருடைய பாடல்களை இன்று படிக்கும்போது கூட அவர் கையாண்டிருக்கும் சொற்சேர்க்கையில் மனம் மயங்குகிறது. அந்த மகத்தான ஆளுமையை நினைத்துக்கொள்ளாமல் ஒருநாளும் கழிந்ததில்லை http://writerpaavannan.blogspot.in