சுஜாதாவின் நம்பிக்கை வார்த்தைகள்!

மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி பின் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றிக்கொண்டு பகுதி நேரமாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருந்தவர்
சுஜாதாவின் நம்பிக்கை வார்த்தைகள்!

மென்பொருள் பொறியாளராகத் தொடங்கி பின் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக பணியாற்றிக்கொண்டு பகுதி நேரமாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதிக்கொண்டிருந்தவர் கபிலன் வைரமுத்து. இன்று திரைத்துறையில் முழுநேர எழுத்தாளராக இயங்கத் தொடங்கியிருக்கிறார். 

எழுத்துலகம் நீங்கள் விரும்பி வந்த துறையா...?

எமக்குத் தொழில் எழுத்துதான். தமிழ்ப் பாட்டுலகம் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் என இன்னப் பிற அம்சங்களில் தேர்ந்து திகழ வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. அதை நோக்கித்தான் பயணப்பட்டேன். எழுத்து, வாசிப்பு என இயங்கிக் கொண்டே இருந்தால் என்ன நடக்குமோ, அந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.
 

சமீபத்திய மகிழ்வு...

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தொலைக்காட்சி ஊடகத்தை அடிப்படையாகக் கொண்ட "மெய்நிகரி' என்ற என் நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடப்பொருளாக கற்பிக்கப்பட்ட செய்தி மகிழ்ச்சி தந்தது. எழுதுகிற எழுத்து கல்வியாக மாணவர்களைச் சென்றடையும்போது அது இரட்டிப்பு ஆனந்தம் தருகிறது.

அண்ணன் கார்க்கியை போல் சினிமாவில் முழுவதுமாக நீங்கள் இயங்கவில்லையே... 

இயக்குநர்களுக்கும் - இசையமைப்பாளர்களுக்கும் - பாடலாசிரியர்களுக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருப்பது போல, தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர்களுக்கும் தெளிவான பணி முகம் வேண்டும். காலப்போக்கில் உருவாகும்.  பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் இது. அதன் அடிப்படையில் சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். "அநேகன்' படத்தில் "தெய்வங்கள் இங்கே...' என்ற பாடலுக்காக இயக்குநர் கே.வி.ஆனந்த்தை சந்தித்தபோது என் எழுத்து விருப்பங்களை தெரிவித்தேன். விரைவில் வெளிவரவிருக்கும் "கவண்' திரைப்படத்தில் எழுத்தாளராகவும் பாடலாசிரியராகவும் படம் நெடுக பங்களிக்கின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அவரோடு பயணித்த இந்த ஆண்டு கலகலப்பும் கல்வியும் நிறைந்த கல்லூரி ஆண்டைப் போல் இருந்தது. தற்போது மேலும் சில மூத்த இயக்குநர்களோடு பணியாற்றத் தொடங்கியிருக்கிறேன். தீவிரமான ரசிகர்கூட்டம் ஆர்வமாக எதிர்பார்த்துகொண்டிருக்கும் படங்களில் அங்கம் வகிப்பதன் மூலம் வெகுஜன சினிமாவின் வெவ்வேறு பரிமாணங்களை அறிய முடிகிறது.

அடுத்தடுத்து...

மூத்தத் தலைமுறையோடு பணிபுரிகிற அதே சமயம், என்னைப் போல் வளர்ந்து வரும் தலைமுறையோடும் கை கோர்த்திருக்கிறேன். கௌதம்மேனன் அவர்களின் உதவி இயக்குநர் மனு ஆனந்த், மிஷ்கின் குழுவில் இருந்த பிரியதர்ஷனி, தரணி யிடம் பணிபுரிந்த ஹரிபாஸ்கர் போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதும்போதும் - "இந்திரஜித்' படத்திற்காக கிருஷ்ணபிரசாத், "மதியால் வெல்' படத்திற்காக பாலமுரளி போன்ற பல புதுமுக இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போதும் அவர்களின் கண்கள் வழி என் உலகம் விரிகிறது. 

வைரமுத்து சாரிடம் வியப்பது...

நேர நிர்வாகம். 

அப்பாவிடம் பிடித்த 5 பாடல்கள்...

"என்னில் விழுந்த மழைத்துளியே...', "எரிமலை எப்படி பொறுக்கும்...', "கண்ணுக்கு மை அழகு...', "மூங்கில் காடுகளே...', "அந்திமழை பொழிகிறது...'.

அப்பா தவிர்த்து பிடித்த எழுத்தாளர்கள்...

அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, யுகபாரதி, கல்யாண்ஜி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com