சிறிய இடைவெளிக்குப் பின் நதியா மீண்டும் தமிழில் நடித்து வரும் படம் "திரைக்கு வராத கதை.' முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்கிறார். துளசிதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்காக, சென்னை வந்திருந்த நதியாவுடன் பேசியதிலிருந்து...
"1984-ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 50 படங்களில்தான் நடித்திருக்கிறேன். காரணம் எல்லாவித சினிமாக்களிலும் நடிப்பதற்கு எனக்கு பிடிக்காது. 80-களில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த ஹீரோயின்கள் மத்தியில், ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு போவேன். அந்தளவுக்கு பக்குவப்பட்டு இருந்தேன். காரணம், எனக்கு காசு, பணம் முக்கியமில்லை. நல்ல சினிமாக்கள்தான் முக்கியம்.
நடிகர்களுக்குதான் சினிமாவில் வயது வரம்பு இல்லை. நடிகைகளுக்கு திருமணத்துக்குப் பின் வாய்ப்புகளே இல்லை. அதையும் தாண்டி நடிகைகளுக்கு இளமையான தோற்றம் இருந்தால் வரம். எனக்கு அப்படியான வரம்தான் என் இளமையான தோற்றம்.
என் உடற்பயிற்சிகள்தான் என் இளமைக்கு காரணம். எனக்கு இரு மகள்கள். மூத்தவள் சனா. கல்லூரியில் 2-ஆம் வருடம் படிக்கிறாள். இளைய மகள் ஜானா. 10-ஆம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் அமெரிக்காவில் படிக்கிறார்கள். நான் கணவருடன் மும்பையில் வசிக்கிறேன். வருடத்தில் பாதி நாள்கள் அமெரிக்காவில் இருப்போம். 80-களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. இப்போது அது மாதிரியான படங்கள் வருவதே இல்லை. "பூவே பூச்சுடவா' படம் இப்போதும் பலருக்கு விருப்பமான படமாக இருக்கிறது. நிறைய படங்களில் நடிக்க எனக்கு இப்போதும் ஆசை இல்லை. நல்ல படங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார் நதியா.