தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 9,292 பெண்கள் நடத்திய மலர் விழா புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. "மகா பதுகம்மா' என்ற அந்த நிகழ்ச்சி அக்டோபர் 8-இல் மகாளய அமாவாசை தினத்தில் கின்னஸ் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது மொத்தம் 9,292 பெண்கள் பங்கேற்றனர். அதில் வெளிநாட்டில் வாழும் தெலங்கானா பெண்களும் அடக்கம். எல்லா பெண்களும் பாரம்பரிய உடையை அணிந்து வந்திருந்தனர். நடனம் ஆடினர்.... பெண் கடவுளான மகா கெளரியை வணங்கி அவரை ஆறுதல் படுத்தும் பாடல்களை பாடினர். இந்தப் பாடலுக்குப் பின்னணியில் தமிழகத்திற்குப் பங்கிருக்கிறது.
அன்றைய ஆந்திராவில், வெமுலாவாடா சமஸ்தானத்தில் ராஜராஜேஸ்வர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தெலங்கானா பகுதி மக்கள் அந்தக் கோயிலுக்குத் திரளாக வந்து வணங்கிச் செல்வார்கள். ராஜராஜ சோழனின் வாரிசான ராஜேந்திர சோழன் வெமுலாவாடா சமஸ்தானத்தில் போரிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதின் அடையாளமாக, அங்கிருந்த ராஜராஜேஸ்வரர் கோயிலில் மக்கள் வழிபட்டு வந்த பிரமாண்ட சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு சோழ நாடு திரும்பினார். தன் தந்தைக்கு அதைக் காணிக்கையாக வழங்கினார்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் கல்வெட்டுகள் தெலங்கானாவிலும் தமிழகத்திலும் உண்டு. இந்த காரணத்தால், வெமுலாவாடா பகுதியில் (இன்றைய கரீம் நகர் மாவட்டம்) இருக்கும் சிவலிங்கத்திற்கும் தஞ்சை பெரிய கோயில் சிவலிங்கத் திற்கும் உருவ ஒற்றுமைகள் உள்ளன.
அங்கே வெமுலாவாடாவில் சிவலிங்கம் இல்லாமல் மக்கள் துக்கம் கொண்டனர். சிவலிங்கம் இடம் மாறியதினால் தனிமைப் படுத்தப்பட்ட பார்வதியும் சோகத்தில் மூழ்கியிருப்பார் என்று பக்தர்கள் நினைத்து, பார்வதி என்னும் கெளரி மனோஹரியைத் தேற்ற பக்திப் பாடல்கள் புனைந்து பாடி பார்வதியை வழிபட்டனர். அது இன்றைக்கும் தொடர்கிறது.
"மகா பதுகம்மா' திருவிழா ஹைதராபாத் எல் பி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் நடுவில் 20 அடி உயரத்தில் மலரால் கோபுரம் உருவாக்கப்பட்டிருந்ததுதான் இந்த நிகழ்ச்சியின் ஹை லைட். மலர் கோபுரத்தின் உச்சியில் மஞ்சளால் கெளரியின் உருவம் செய்து வைத்து வணங்கி வருகின்றனர். வழிபாடு முடிந்ததும், தடாகத்தில் மலர் கோபுரம் மற்றும் கெளரியின் மஞ்சள் உருவம் கரைக்கப்படுகிறது.
கேரளத்தில் ஓணம் திருவிழாவின் போது நடக்கும் "திருவாதிரைக் களி' என்னும் கை கொட்டி ஆடும் ஆட்டத்தில் ஒரே நேரத்தில் 9,211 பெண்கள் கலந்து கொண்டு ஆடியதுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை தெலங்கானா பெண்கள் முறியடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களுடன் ஒலிம்பிக்ஸ் வீராங்கனை சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும் கலந்து கொண்டனர். ஆங்கிலப் பெண்களும் சேலை அணிந்து இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
- கண்ணம்மா பாரதி