மீரா எர்டா, வடோதரா நகரைச் சேர்ந்தவர். "ஃபார்முலா ரேஸிங்' எனப்படும் அதிவேக கார் ஓட்டும் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்திய பெண். பதினேழு வயதில் இந்தச் சாதனைக் கனியை மீராவால் பறிக்க முடிந்திருக்கிறது.
"கார் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். வேகம் அதைவிட பிடிக்கும். காரும், வேகமும் சேர்ந்து என்னை ஃபார்முலா கார் ரேசிங்கை எனக்கு அறிமுகப் படுத்தியது. இதுவரை எழுபத்தைந்து கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இதில் தேசிய, சர்வதேச ரேஸ்கள் அடங்கும். இப்போது ஐரோப்பா கார் ரேசிங் தொடரில் கலந்து கொள்ளவிருக்கிறேன்.
அப்பாவுக்கு சொந்தமாக கார் ரேஸிங் செய்யும் மைதானம் இருக்கிறது. அதனால் ரேஸ் கார்களை ஓட்டிப் பழகுவது மிகவும் செளகரியமாக அமைந்தது. அடுத்தடுத்து கோலாப்பூர், ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு அனுபவங்களை பெருக்கிக் கொண்டேன்.
பிறகு ஃபார்முலா ரேஸிங் பக்கம் கவனத்தைத் திருப்பினேன்.''
"ஃபார்முலா ரேஸிங் கார்கள் மணிக்கு 240 கி. மீ. வேகத்தில் பறக்கும். ஃபார்முலா ரேஸிங் பொதுவாக ஆண்களின் ஆளுமையில் இருக்கும் வீர விளையாட்டு. ஆரம்பத்தில் நான் ஒரு பெண் என்பதால் "இவள் எப்படி காரை ஓட்டுகிறார் என்று பார்ப்போம்' என்பது மாதிரி நடந்து கொள்வார்கள். கார் ஓட்டும் போது அப்படியும் இப்படியும் வந்து பயமுறுத்துவார்கள். போகப் போக எனது திறமையை உணர்ந்து கொண்ட பிறகு சக போட்டியாளராக என்னைக் கருதுகிறார்கள்'' என்கிறார் மீரா.
- பனிமலர்