டாக்டரைக் கேளுங்கள்

எனது திருமணம் 24 வயதில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளாக கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்.
டாக்டரைக் கேளுங்கள்

டாக்டர் எழிலரசி பிரசன்னா மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் பதிலளிக்கிறார்...

* டாக்டர், எனக்கு வயது 58 ஆகிறது. அரசுப் பணியில் இருந்து இந்த ஆண்டு ஓய்வு பெறுகிறேன். ஆனால், இன்னும் மாதவிடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாதவிடாய் நிற்பதற்கு ஏதேனும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?
- சாந்தி, பெங்களூரு.
மாதவிடாய் நிற்பதற்கான சராசரி வயது 48 முதல் 55 வரை. இந்த வயது தாண்டியும் மாதவிடாய் தொடர்ந்தாலோ அல்லது மாதவிடாய் நின்றபின் திடீரென உதிரப்போக்கு, அதிகமான வெள்ளைப்படுதல் ஏற்பட்டாலோ மகளிர் சிறப்பு மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு 58 வயது ஆகியும் மாதவிடாய் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் கருப்பை மற்றும் கருப்பை வாய் பரிசோதனை (Gynaecological examination) மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மிகவும் அவசியம். இதன்மூலம் உங்களுக்கு ஏதேனும் கட்டிகள், கருப்பை வீக்கம் (Adenomyosis) அல்லது கருப்பை உள்சுவர் தடிமன் (Endometrial thickening) இருக்கிறதா என்பதைக் கண்டறிவது முக்கியம். எனவே நீங்கள் அருகில் இருக்கும் மகளிர் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

* எனது திருமணம் 24 வயதில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளாக கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். குழந்தை பிறப்பை சில ஆண்டுகள் தள்ளிப்போட்டு வந்தோம். இப்போது குழந்தை பிறக்காதது ஒரு குறையாக இருக்கிறது. செயற்கை முறையில் தான் குழந்தை பெற முடியும் என்கிறார்கள். தக்க ஆலோசனை கூறுங்கள்!
-சிவகாமி, திருநெல்வேலி
 நீங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டது மட்டுமே குழந்தை தங்காததற்கு காரணம் என்று கூறிவிட முடியாது. திருமணமாகி கணவனும் மனைவியும் ஓராண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த நிலையில் குழந்தை தரிக்கவில்லை என்றால் இருவருமே  மேற்கொண்டு சில பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். குழந்தைப்பேறு இல்லாமைக்கு ஆண் பெண் இருவருக்குமே குறைகள் இருக்கலாம். நீங்கள் செயற்கை முறையில்தான் குழந்தை பெற முடியும் என்று கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தகுந்த மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே இதுகுறித்து முடிவு செய்ய இயலும். உங்கள் கணவருடைய உயிரணு பரிசோதனை, உங்களுடைய சினைப்பைகள், கருக்குழாய்கள் மற்றும் கருப்பை - இவை அனைத்தும் குறைபாடுகள் ஏதுமில்லாமல் சீராக இயங்கும் நிலையில் நீங்கள் இயற்கையாகவே கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. அருகில் இருக்கும் மகளிர் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். குழந்தைப்பேறு விரைவில் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

* எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இயற்கையாக தாய்ப்பால் சுரப்பிகள் வேலை செய்யாததால் இரண்டுக்குமே தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள் வளர்ச்சி பாதிக்கப்படுமா?
- ராகினி, ஸ்ரீபெரும்புதூர்.
குழந்தை பிறந்தவுடன் முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது மிக மிக அவசியம். இது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளைத் தரவல்லது.  தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் தாய்ப்பால் புகட்டப்படாத குழந்தைகளைவிட அறிவாற்றலில் சிறந்து விளங்குவார்கள். மேலும் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு செவி அழற்சி, வயிற்றுப்போக்கு, நிமோனியா,  ஒவ்வாமை போன்றவை அடிக்கடி வரலாம். மேலும் இக்குழந்தைகளுக்கு உடல் பருமன், நீரிழிவு,   SIDS (Sudden Infant   Syndrome) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எது எப்படியாயினும் தாய்ப்பால் குடித்து வளர்வது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்றே நான் கூறுவேன். எனவே தாய்மார்கள் மனமுவந்து தாய்மை உணர்வோடு தங்கள் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட வேண்டும். இதன்மூலம் ஒரு நல்ல ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்கலாம்.

* கருவுற்ற நிலையில் நன்றாகத் தூங்கவேண்டும் என்கிறார்கள். எனக்குத் தூக்கம் வருவதில்லை. இதற்கு தூக்க மாத்திரை சாப்பிடலாமா... இது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா?
- செல்வி, புதுக்கோட்டை.
 கர்ப்ப காலத்தின்போது சத்தான உணவு முறை எவ்வளவு அவசியமோ, அதேபோன்று அமைதியான உறக்கமும் அவசியமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு  இரவு நேரத்தில் 7 -8  மணிநேர உறக்கமும் பகலில் 1 -2 மணி நேர உறக்கமும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றது. இருப்பினும் ஐய்ள்ர்ம்ய்ண்ஹ என்று சொல்லக்கூடிய தூக்கமின்மை கர்ப்பகாலத்தில் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கு மேலான பெண்களுக்கு ஏற்படலாம். தூக்கமின்மையால் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள் சில எளிமையான வழிமுறைகளை கையாள்வது மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
 உறக்கத்திற்கு முன் மிதமான வெந்நீரில் குளித்தல், உறக்கத்திற்கு ஏதுவான அமைதியான சூழல் உருவாக்கி உறங்கச் செல்வது, இனிமையான பாடல்களைக் கேட்பது, மிதமான சூட்டில் பால் பருகுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். கர்ப்பகால தூக்கமின்மைக்கு மாத்திரைகள் உட்கொள்வது வயிற்றில் வளரும் குழந்தைக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே மாத்திரைகளைத் தவிர்ப்பது நன்று.

* டாக்டர் எனக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. தற்போது மீண்டும் கருவுற்றிருக்கிறேன். மறுபடியும் இரட்டைக் குழந்தைகள் பிறக்குமோ என்று அச்சமாக உள்ளது. கருவைக் கலைக்க விரும்புகிறேன். எட்டு வாரம் ஆகிறது. என்ன செய்யலாம்?
- தேவகி, அம்பத்தூர்.
முதல் கருத்தரிப்பு இரட்டைக் குழந்தையாக இருக்கும்பட்சத்தில், இரண்டாவதும் இரட்டைக் குழந்தையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பினும், உறுதியாகக் கூற இயலாது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் இதை உறுதிப்படுத்திக் கொள்வதே நல்லது. உருவாகி இருப்பது ஒரு கருதான் என்றால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் அருகில் இருக்கும் மகளிர் சிறப்பு மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரையின் பேரில் ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்ளவும்.

* நானும் என் கணவரும் சற்று மாநிறமாக இருப்போம். என் குழந்தைகளில் ஒன்று நல்ல சிகப்பாகவும், மற்றொரு குழந்தை மிகவும் கறுப்பாகவும் உள்ளது. இதனால் எனக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. எனக்கு நல்ல ஆலோசனை கூறுங்கள்.
- சுகந்தி லட்சுமி, மதுரை.
எல்லா விரல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதுபோல நமக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே நிறமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கறுப்பும் ஒரு அழகான நிறமே. கறுப்பு கம்பீரமான நிறமும்கூட. அதுமட்டுமல்லாமல் நிறம் என்றும் நிரந்தரம் அல்ல.  ""அம்மா நான் ஏன் கறுப்பாக இருக்கிறேன்''  என்று குழந்தை சஞ்சலப்படும் என்றால், பிள்ளைக்கு தன்னம்பிக்கையூட்ட தாயாகிய நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதில் தாழ்வு மனப்பான்மைக்கு இடமே இல்லை. 

* என் வயது 42. இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் ஆபரேஷன் செய்து கொண்டேன். தற்போது இன்னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். அதற்கு என்ன சிகிச்சைகள் மேற்கொள்ளவேண்டும்?
- விஜயா, தஞ்சாவூர்.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், இரண்டு விதமான சிகிச்சை முறைகள் உள்ளன.
ஒன்று: பன்க்ஷஹப் தங்ஸ்ரீஹய்ஹப்ண்க்ஷ்ஹற்ண்ர்ய் எனப்படும் கருக்குழாய்  மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இது 100% பலனளிக்கும் என்று கூற முடியாது. மேலும் இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் கருக்குழாயில் கரு தங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இரண்டு: செயற்கை முறை கருத்தரித்தல்  (பங்ள்ற் ற்ன்க்ஷங் க்ஷஹக்ஷஹ்)  கருக்குழாய் அடைப்பு இருக்கும் பெண்களுக்கு இம்முறை நல்ல பலனளிக்கும். கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பின்னர், மற்றுமொரு அறுவை சிகிச்சையின்றி, கருத்தரிக்க விருப்பம் உள்ளவர்கள் இம்முறையைப் பின்பற்றலாம். உங்கள் வயது 42 எனக் கூறி உள்ளீர்கள். எனவே உங்களுக்கு பங்ள்ற் ற்ன்க்ஷங் க்ஷஹக்ஷஹ் முறை ஏற்றதாக இருக்கும்.

* நான் ஏழு மாத கர்ப்பமாக உள்ளேன். ரத்த பரிசோதனை செய்த மருத்துவர் எனக்கு ரத்த சோகை இருப்பதாக கூறியுள்ளார். ஹீமோகுளோபின் அளவு 8.0 உள்ளது.  நான் என்ன செய்ய வேண்டும்?
- பானு, அரியலூர்.
கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 11}க்குக் குறைவாக இருப்பின் அது ரத்த சோகையாக எடுத்துக்கொள்ளப்படும். நீங்கள் ஏழு மாத கர்ப்பம் என்றும்  ஹீமோகுளோபின் அளவு 8.0 என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். சரிசதவிகித உணவு முறை, இரும்புச் சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்து நரம்பு ஊசிகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.  ஹீமோகுளோபின் அளவு கூடவில்லை என்றால், பிரசவத்தின் போதோ அல்லது குழந்தை பிறப்பிற்குப் பிறகோ, ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இருக்கலாம்!
(தொகுப்பு: ரவிவர்மன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com