சர்வதேச மகளிர் தினத்தை மங்கையர்கள் பலரும் குழுவாக இணைந்து, போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி பல விதமாக கொண்டாடினார்கள்.
ஆனால், சென்னை கொளத்தூர் புத்தகரம் பகுதி சுகம் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கொண்டாடிய மகளிர் தினம் சற்று வித்தியாசமானது.
மாமியார்-மருமகள்; அம்மா-மகள் என்று கூட்டணி அமைத்து, கோலாட்டம், கும்மி, வாய்ப்பாட்டு, இசைப்பாட்டு, நடனம் என வயது வித்தியாசம் இல்லாமல் மகளிர் தினத்தை மனம் மகிழக் கொண்டாடியுள்ளனர்.
மாமியார்-மருமகள் இணைந்து கோலாட்டம், கும்மியாட்டம் நடத்தவேண்டும் என்ற ஐடியா எப்படித் தோன்றியது என்று கேட்டபோது, சங்கத்தின் செயலாளர் சற்குணம் விவரித்தார்:
"எங்கள் குடியிருப்பு சங்கத்தின் தலைவர் முரளிதரன் தந்த ஊக்கமும் ஒத்துழைப்பும்தான் புதுமையான முறையில் மகளிர் தின விழாவைக் கொண்டாடினோம்.
இங்கே மாமியார்-மருமகள்கள் எல்லாம் தோழிகள் போல இருப்போம். பார்ப்பவர்கள் அம்மா-மகள்கள் என்றே கூறுவார்கள்; நாங்களே சொன்னால்தான் மற்றவர்களுக்கு மாமியார்-மருமகள் என்று தெரியும். வேலைக்குப் போகும் பெண், வேலைக்குப் போகாத பெண் என்ற பாகுபாடு பார்க்கமாட்டோம்.
எல்லோரும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் ஒத்த குணமுடையவர்களாக அமைந்திருப்பதால் இது சாத்தியம் என்று நினைக்கிறோம். நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மகளிர் தினத்தை பாரம்பரிய விளையாட்டுகளுடன் கொண்டாடி வருகிறோம்'' என்றார்.
- வர்மா