ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வரும் படம் "மதிப்பெண்.' ஒரு நடுத்தர ஆசிரியரின் மகனான இளங்கோ, தன் ஊர்த் தலைவரின் சாதி வெறியை அடக்கி ஒழிக்க, தன் தாயின் சபதத்தின்படி, ஐ.ஏ.எஸ். படிக்க சென்னைக்கு வருகிறான். அவனின் அறிவாற்றலை அறிந்து கொண்ட நாயகி தாமரை, அவன் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு வேண்டிய பல உதவிகள் செய்கிறாள். அவர்களுக்கு இடையே நட்பு அரும்பி, நாளடைவில் அது காதலாக மாறுகிறது. பிறகு, அவன் மாவட்ட ஆட்சியாளராக மைசூரில் பணி ஏற்கிறான். தாமரையை ஏற்க விரும்பி சென்னையில் திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்யச் சொல்கிறான் இளங்கோ. ஆனால், அதற்கு அவன் சொன்னபடி செல்லவில்லை. அவன் ஏன் வரவில்லை. அவனுக்கு ஏற்பட்ட விபரீதங்கள் என்ன என்பதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லும் கதை இது. பாண்டியன் கலைக்கூடம் சார்பில் இரா.சோதிவாணன் கதை எழுதி தயாரிக்கிறார். ஸ்ரீஜித், நேகா, அமிர்தா, லிவிங்ஸ்டன், நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றர். திரைக்கதை எழுதி இயக்குகிறார் கிருஷ்ணமூர்த்தி. ஏப்ரலில் படம் திரைக்கு வருகிறது.