பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் ஒன்று பெண்களின் முகத்தைக் குறிவைத்து நிகழும் அமில வீச்சு. அமிலம் வீசும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், சில ஆண்டுகள் கழித்து விடுதலையாகி வெளியே வந்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆயுளுக்கும் தங்கள் முக அழகை இழந்து, வெளியே வரவே தயங்கி வீட்டுக்குள் சிறைக் கைதியாக இருக்க வேண்டிய நிலை.
"அமில வீச்சால் கிடைத்த கோர முகத்துடன் ஒதுங்கி வாழ்வதையும் ஒளிந்து வாழ்வதையும் தவிர்க்கும் காலம் வந்து விட்டது" என்கிறார் ரேஷம் கான். இவரும் அமில வீச்சிற்கு இரையானவர்தான்.
ரேஷம் லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் வசித்து வரும் மாணவி. மாடலிங் செய்வதிலும் நாட்டம் கொண்டவர். அதனால் தனது இயற்கையான அழகு முகத்தை ஒப்பனையின் மூலம் மேலும் மெருகேற்றி மிக அழகாக வைத்துக் கொள்பவர். ஆனால் பாருங்கள் - நான்கு மாதங்களுக்கு முன், உறவினர் ஒருவருடன், தனது 21-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, ரேஷம் மீது அமிலம் வீசப்பட்டது. அவரது முகம் வெந்து ரணமாகியது. முக அழகு கரிந்து போனதுடன், இடது கண்ணும் பாதிப்புக்குள்ளானது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேஷமுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் நவீன முறையில் நடந்தன. இறுதியில் தழும்புகள் இல்லாத அழகான முகத்தை அவர் திரும்பப் பெற்றார். "எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்" என்று பயந்து கொண்டிருந்த ரேஷமுக்கு இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த சந்தோஷத்தில், செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
"ரேஷம் மீண்டு வந்திருப்பது, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை, மன உறுதியைத் தந்துள்ளது' என்று அவருக்கு வலைத்தளங்களில் ஒரே பாராட்டு மழை! . ரேஷம் கல்லூரிக்குப் போகத் தொடங்கிவிட்டார். இவரது சிகிச்சைக்காக மட்டும் ரூ.50 லட்சம் நிதி குவிந்தது.
இந்தியாவில் அமில வீச்சால் முகங்களில் தழும்புகளைக் கொண்டு தினமும் சோகத்தில் வாழும் பெண்களுக்கு ரேஷமுக்கு கிடைத்த நவீன சிகிச்சையும், சிகிச்சைக்கான நிதியும் கிடைக்க வேண்டுமே!