மோரில் ஊற வைத்த வாழைப்பூவை நெய்யில் வதக்கி உளுத்தம் பருப்பு, வற்றல், புளி சேர்த்து அரைத்தால் சுவையான துவையல் தயார்.
கைப்பிடி பச்சை மிளகாயை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து நல்லெண்ணெயில் சுருள வதக்கி, சிறிது புளியைக் கெட்டியாக கரைத்துச் சேர்த்து, வெந்தயத் தூள், பெருங்காயத் தூள், உப்பு, சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் "சில்லி சைட் டிஷ்' தயார்.
வாழைத் தண்டு பொரியல் செய்யும்போது முட்டைக் கோஸையும் மெலிதாக அரிந்து சேர்த்தால் சுவை கூடும்.
அவல், பாசிப் பயிறு ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து தண்ணீரில் கலக்கி கொதிக்க வைத்து, பால், சர்க்கரை, ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்தால் நொடியில் பாயாசம் தயார்.
முறுக்கு மாவு, தேன்குழல் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் "டிஷ்யு' பேப்பரில் மாவை வைத்து சற்று ஒற்றி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு விடும் ("டிஷ்யு' பேப்பர் மாவில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்).
முதல் நாள் அரைத்த அரிசி மாவுடன் (ஒரு கிலோ அரிசி மாவுக்கு ஒரு பெரிய உருளைக்கிழங்கு) உருளைக்கிழங்கை வேக வைத்து அரைத்துக் கலந்து வடாம் செய்தால், பொரிக்கும் போது பெரியதாகப் பொரியும், ருசியும் அபாரமாக இருக்கும்.
எந்தப் பாயாசம் செய்தாலும் அதனுடன் மூன்று பச்சை வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.
மோர்க்குழம்பு செய்யும்போது அதில் சில அன்னாசிப்பழத் துண்டுகளை அரிந்து சேர்த்தால் சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து.
டீ போடும்போது சிறிது பெருஞ்சீரகத்தைச் சேர்த்தால் சுவை அதிகரிக்கும், உடல்நலத்துக்கும் நல்லது.
தயிரிலிருந்து வெண்ணையை எடுத்து சாதாரணத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு தான் முன்பே சேகரித்த வெண்ணையுடன் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒருவித வாடை வரும்.