பொதுவாக ஒருவரது கண்கள், இதயம், கல்லீரலை இன்னொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவார்கள். ஆசிய கண்டத்தில் மட்டுமல்ல உலகத்திலேயே முதல் முறையாக இளம் பெண் ஒருவருக்கு ஆணின் கைகளை பொருத்தியுள்ளார்கள். இந்த மகத்தான அறுவை சிகிச்சை கொச்சி மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்துள்ளது.
ஷேரயோ கெளடா. பத்தொன்பது வயதாகும் பொறியியல் கல்லூரி மாணவி. சென்ற ஆண்டு பூனாவிலிருந்து மணிபால் பொறியியல் கல்லூரிக்கு பேருந்து ஒன்றில் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. உருண்டு புரண்ட பேருந்தில் அடிப்பட்டு ஷேரயோவின் கை இரண்டும் சிதைந்து போயின.
மருத்துவமனையில் வேறு வழியில்லாமல், ஷேரயோவின் உயிரைக் காக்க, க்ஷேரயோவின் இரண்டு கைகளையும் துண்டித்துவிட்டனர்.
சச்சின். கொச்சி நகரைச் சேர்ந்த மாணவர். இருபது வயதாகிறது. சில நாட்களுக்கு முன் பைக் விபத்தில் இவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. அதனால், அவரது உடல் உறுப்புகளைத் தானமாகத் தர சச்சினின் பெற்றோர்கள் முன் வந்தார்கள். கண், இதயம் , கல்லீரல் இவற்றுடன் முன் கைகள் இரண்டையும் தானமாகத் தர முடிவெடுத்தனர்.
இருபது மருத்துவர்கள், பதினாறு மயக்க மருந்து தரும் மருத்துவர்கள் சேர்ந்த மருத்துவக் குழு சச்சினின் கைகளை ஷேரயோவிற்குப் பொருத்துவது என்று தீர்மானித்து அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். அறுவைச் சிகிச்சை பதின்மூன்று மணி நேரம் நீண்டது.
இந்த அறுவைச் சிகிச்சையில் ஷேரயோவின் கைளின் நரம்புகள், தமனிகள், நாளங்கள் இவற்றை சச்சினின் கைகளின் நரம்புகள், தமனிகள், நாளங்களுடன் நுணுக்கமாக கச்சிதமாக இணைக்க வேண்டும். அப்போதுதான் இணைக்கப்பட்ட கைகளில் உணர்வு வரும். கைகளை அசைக்க முடியும். உயர்த்தி இறக்க முடியும்.
ஒருவர் கைகளை இன்னொருவருக்குப் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் உலகில் இதுவரை ஒன்பது முறைதான் செய்யப்பட்டுள்ளன. விரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டை அசைவுகளுக்காக ஷேரயோவுக்குப் பயிற்சிகள் தரப்படுகின்றன. இரண்டு வருட காலத்திற்குள், பொருத்தப்பட்ட கைகளை எண்பது சதவீதம் பயன்படுத்திக் கொள்ள முடியும்'' என்கிறார் தலைமை மருத்துவர் சுப்பிரமணி அய்யர்.
ஆணின் கைகளை பெண்ணுக்கு கொச்சியில் வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது உலகிலேயே முதல் முறையாக நடந்திருக்கும் அதிசயம்.
- பனிமலர்