இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-18

சிலப் பெண்களிடம்,   ""நீங்கள் என்ன  செய்கின்றீர்கள்?''  என்று  கேட்டால் உடனே  அவர்கள்,  "" வீட்டில்  சும்மாதான்  இருக்கிறேன்''  என்பார்கள்.
இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-18

சிலப் பெண்களிடம்,  ""நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?'' என்று கேட்டால் உடனே அவர்கள், ""வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்'' என்பார்கள். அப்படியெனில் நீங்கள் வீட்டில் குழந்தைகளை  கவனித்து கொள்ளவில்லையா, சமையல் மற்றும் வீட்டை கவனிக்கவில்லையா. வீட்டை முழுவதும் நிர்வாகம் செய்துவிட்டு   சும்மாதான்  இருக்கிறேன் என்பது   நம்மிடையே   ஊறிப்போன விஷயம். இந்த எண்ணத்தை மாற்ற ஏதேனும் சிறு தொழில் அல்லது கைத்தொழில் வீட்டில் உள்ளபடியே செய்து மாதம்  ஒரு சிறு தொகையையாவது வருமானமாக ஈட்டலாமே'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ். 

என்ன தொழில்  செய்வது? முதலில்  உங்களுக்கு எதில் ஆர்வம்  அதிகம்  என பாருங்கள். உணவு சம்பந்தப்பட்டதா அல்லது கைவினைப் பொருள்கள் தயாரிப்பா என பாருங்கள். உங்கள் வீட்டின் அருகில் ஏதேனும் பயிற்சி நிலையம்  உள்ளதா  என தேடி  கண்டு படியுங்கள்.  குறைந்த கட்டணப்  பயிற்சி வகுப்புகள் ஏதேனும் இருந்தால் அதில் பயிற்சி எடுத்துக் கொண்டு நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஏதேனும் ஒரு சிறு தொழிலை செய்யலாம் அல்லது  உணவு ( அ)  கைவினைப்  பொருளை  பலவிதமாக தயாரிப்பது எப்படி என்றும் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, உணவு என்றால்  ஆர்கானிக் பெருங்காயம், மூலிகை சூப் பவுடர், மூலிகை மசாலா பொடி, ரெடி மிக்ஸ் போன்ற வகையாறாக்கள் பல உள்ளன. அல்லது கைவினைப் பொருள்கள் என்றால் செயற்கை நகை, பட்டு நூல் நகைகள்,  சணல், முத்து பொருள்கள் என அதிலும் ஏராளமான கைவினைப் பொருள்கள் உள்ளன. ஏதேனும் ஒரு கைவினைப் பொருள்கள் செய்வதைக் கற்றுக் கொண்டாலும், அதை வைத்து பலவிதமான கைவினைப் பொருள்கள் தயாரிக்க உங்களுக்கே  ஐடியா வந்துவிடும்.  இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே செய்ய கைத்தொழிலும் ஆச்சு, வருமானமும் ஈட்டலாம். அப்படி பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வசதி இல்லையா, கவலைப் படாதீங்க  முதலீடே  இல்லாத  சிறு தொழிலும் செய்யலாம்,    அந்த வகையில் முதலீடே இல்லாமல் என்ன சிறுதொழில் செய்யலாம்  என பார்ப்போம். 

பாலீஷ் மாப்: ஸ்டெயின்லெஸ்  ஸ்டீல்  பாத்திரங்கள்  பாலீஷ்  போடுவதற்கு தேவைப்படும்  மாப்.  அதாவது   ஸ்டீல் பாத்திரம்  எதுவாக  இருந்தாலும்  அது தயார்  நிலையில்  உள்ள போது  பார்ப்பதற்கு  தகரம் போன்றுதான்  இருக்கும். அதில்  பல கட்ட  பாலீஷ் போட்ட  பிறகுதான் பளபளப்பாக  மாறும்.  அந்த பாலீஷ் போடுவதற்கு பாலீஷ் போடும் மெஷினில் உபயோகிக்க பிரத்யேகமாக தயாரிக்கப்படும் மாப் அவசியம். அதை எப்படி தயார் செய்வது என பார்ப்போம்.  

உங்கள்  வீட்டில்  தையல் மிஷின் இருந்தால்  போதும்.  அதை வைத்து மாப் தயாரிக்கலாம். இந்த  மாப்  தயாரிப்பதற்கு  தேவையான  மூலப்பொருள் என்னவென்றால் வேஸ்ட் துணிகள்தாம். இதனை தையல் கடை வைத்திருப்போர், எக்ஸ்போர்ட்  நடத்துவபவரிடமிருந்து  வேஸ்ட் துணிகளை வாங்கி வரவும்.  அதனை  வட்ட வடிவமாக சமமாக  அடுக்கி அரை அங்குல அளவிற்கு  அடுக்கி  பின்னர்  தையல் மிஷினில்  வைத்து  தைக்க வேண்டும். இதேபோன்று  தைத்தவற்றை  7 அடுக்குகளாக அடுக்கி  வைத்து  பின் நடுவில் அட்டை அல்லது பிளாஸ்டிக் துண்டு வைத்து ஆணியால் அடித்து ஒன்றாக்கினால்  ஒரு  பாலீஷ் மாப் தயார்.  இது பல  அளவுகளில் தேவைப்படும். இதை  சென்னை பிராட்வேயில் உள்ள  மொத்த  கடை வியாபாரிகள்  அல்லது அந்தந்த ஊர்களில் உள்ள ஸ்டீல் பாத்திரம் பாலீஷ் செய்பவர்களிடம் விற்பனை செய்யலாம். ஒரு சில ஸ்டீல்  கம்பெனிகள்  துணியை  அவர்களே தந்து மாப் தயார் செய்து  தர சொல்லுவார்கள். அவர்களுக்கு பீஸ் ரேட்டில் தைத்தும் தரலாம். ஸ்டீல் கம்பெனிகளுக்கு இதுபோன்ற மாப்  அதிகம் தேவைப்படுகிறது. இதற்கு நல்ல  டிமாண்ட்  உள்ளது. சென்னையில்  பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் இதனை குடிசைத் தொழிலாகவே செய்கின்றனர். அவர்களை அணுகினாலும் பீஸ் ரேட்டுக்கு  தைத்து  தர ஆர்டர் தருவார்கள். அவர்களே  உங்களுக்கு பயிற்சியும் தருவார்கள். இதில் வெள்ளை மாப் என்றால் விலை அதிகம், கலர் மாப் என்றால் விலை  சற்று குறைவு. முடிந்தவர்கள் முயற்சி  செய்து பார்க்கலாமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com