* பாதங்களில் வெடிப்பு, தீராத பிளவு ஏற்பட்டு வலி ஏற்பட்டு வருவதைத் தடுக்க, தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் புங்கமரக்காய்த் தோலை ஊறவைத்து அதில் கல் உப்பைச் சேர்க்கவும். இந்த நீரில் கால்களை கால் மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர், எலுமிச்சம் பழத்தை வெட்டி அதன் தோலை பாதங்களில் தேய்க்கவும். அதன் பிறகு துணியால் நன்கு துடைத்து கிளிசரின் தடவிவரவும். அவ்வப்போது இப்படி செய்து வரவேண்டும்.
* கை, கால்களில், முகத்தில் முடி இருப்பதால் பெண்களுக்கு அழகு கெடும். இதைத் தடுக்க கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சளை சமபங்கு எடுத்து பால் கலந்து கலவையாக்கவும். பின்னர், இதை முடி உள்ள இடங்களில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து காய்ந்த அந்த கலவையை துணியால் தேய்த்து எடுத்துவிடவும். இப்படி தொடர்ந்து செய்து வர முடி உதிரும்.
* கால், கைகளிலும் முகத்திலும் கருமை நிறம் இருப்பது அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க பாதாம் எண்ணெய்யைத் தடவி வர பலன் கிட்டும்.
* வாய்ப்புண் தொல்லையா, மூட்டுவலியால் அவதிப் படுபவர்களா, தீராத தலைவலியா... பலா மரத்தின் இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். பின் அதில் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலை வேளையில் அருந்தி வர வாய்ப்புண் தீரும். கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம பங்கு எடுத்து நீர் விட்டுஅரைக்கவும். அதை சுட வைத்து சிறிது கற்பூரம் சேர்க்கவும். இந்த கலவையை மிதமான சூட்டில் வலிக்கும் பகுதியில் தடவி வந்தால் மூட்டு வலி குணமாகும். கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை கலந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.
* முகத்தில் உள்ள கருமை மறைய மஞ்சள்தூளில் கரும்புச் சாறு கலந்து தடவி வர பலன் கிட்டும்.
* தொண்டைப்புண் நீங்க சித்தரத்தையைப் பொடி செய்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வரவும்.
- ஆர்.ரக்சனா சக்தி