""வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரத்தில் என்ன செய்யலாம் என யோசித்து, அவரவர் வசிக்கும் இடத்தைச் சுற்றி என்னதேவை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே, நேர்மையாகவும், சுயமாகவும் சிறு தொழில்கள் தொடங்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், தோழிகளே! வீட்டில் உள்ள வேலைகளை சீக்கிரம் செய்து விட்டு உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்து வருமானம் ஈட்டலாம். இவ்வாறு செய்வதால் நம்மை தனித் தன்மையுடன் பிரதிபலிக்கவும், நமக்கென்று ஒரு மரியாதையை உருவாக்கிக் கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ். தொடர்கிறார்:
""இந்த வாரம் நாம் பார்க்கபோவது பழைய பட்டுப் புடவை பாலிஷ். சாதாரணமாக, நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பட்டுப்புடவை விஷயத்தில் எப்போதும் ஒரு செண்டிமென்ட் இருக்கும். அதனால், நாம் வைத்திருக்கும் பட்டுப்புடவை என்னதான் பழசாகி போனாலும் கூட அதை தூக்கி எறிய மனம் வராது. அதனால் பழைய பட்டுப்புடவைகளுக்கு பாலிஷ் செய்து கொடுக்கலாம். இதனால், புடவை புத்தம் புதிய பொலிவுடன் தோற்றமளிக்கும். நமக்கு வருமானமும் கிடைக்கும். இதற்கு ரூபாய் 40,000 முதலீடு தேவை. 10க்கு 10 இடமும் வேண்டும். வீட்டில் மொட்டை மாடி இருந்தால் மேற்கூரை அமைத்தாலே போதும். இதற்கு மின்சாரம் தேவையில்லை. காலை 7மணி முதல் வெயில் இருக்கும் வரைதான் வேலை இருக்கும். மேலும், கிழிந்த பட்டுப் புடவைக்கு டார்னிங் செய்து கிழிசல் தெரியாமல் செய்யலாம். ஸ்டோன் ஒட்டி தரலாம். புதுப்புடவை எப்படி மொட மொடப்பாக இருக்குமோ அதே போன்று புத்தம்புது பொலிவுடன் புடவை காட்சியளிக்கும்.
அதுபோன்று அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு காட்டன் புடவைகளுக்கு கஞ்சி போடுவதற்கு எல்லாம் நேரம் இருக்காது. அதனால், காட்டன் புடவைகளுக்கு கஞ்சிப் போட்டு தரலாம். இவற்றை கெமிக்கல் ஏதுமில்லாமல் ஆர்கானிக் பொருள்கள் கொண்டே செய்யலாம்.
சென்னையை சேர்ந்த கனகவள்ளி என்பவர் இதனை பெரிய பிசினஸôகவே வீட்டில் இருந்தபடியே செய்து மாதம் ரூபாய் 30,000 வரை சம்பாதிக்கிறார் என்பது மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.