அடிமை வாழ்வை அகற்றிட
அண்ணல் காந்தி தலைமையில்
கொடியை ஏந்தி வீரமாய்
உரிமைக் குரலை எழுப்பினர்!
சொத்து சுகத்தை இழந்தனர்!
சோகச் சிறையில் வீழ்ந்தனர்!
எத் தனையிடர்கள் நேரினும்
எதிர்த்து நின்றார் துணிவுடன்!
அடக்கு முறையைக் கண்டுமே
அஞ்சவில்லை வாய்மையைத்
தொடக்கம் முதலே கொண்டதால்
தோல்வி காண வில்லையே!
ஆயு தங்கள் தோற்றன!
அகிம்சைதானே வென்றது!
தாயும் சேயும் போலவே
நாடும் வீடும் மகிழ்ந்தன!
எழுபது ஆண்டுகள் கடந்தன
இந்திய தேசமும் உயர்ந்தது!
தொழுவோம் தியாகிகள் பாதத்தை!
தொடர்வோம் சுதந்திர கீதத்தை!
வண்ணக் கொடியை ஏற்றுவோம்!
வணங்கி நாட்டைப் போற்றுவோம்!
எண்ணம் உயர்வாய்க் கொள்ளுவோம்!
எங்கும் இன்பம் நிறையுமே!
-அ.கருப்பையா