நேரம் கிடைத்திருந்தால்...!
பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு சமயம் புத்தகம் ஒன்றை எழுதினார். அந்தப் புத்தகம் வெறும் 40 பக்கங்கள் மட்டுமே உடையதாய் இருந்தது! அதைப் படித்த ஒருவர் சர்ச்சிலிடம், "தாங்கள் இந்தப் புத்தகத்தை இன்னும் அதிக பக்கங்கள் எழுதியிருக்கலாமே....,நேரம் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டார். உடனே சர்ச்சில், " எனக்கு நேரம் கிடைத்திருந்தால் இதையே நான் ஐந்து பக்கங்களாக சுருக்கி எழுதியிருப்பேன்!'' என்றார்.
மு.ரியானா, கம்பம்.
எதற்கு இந்த ஜம்பச் செலவு?
நெ.து.சுந்தரவடிவேலு ஒருமுறை ஆப்பிள் ஒன்றை வாங்கிக் கொண்டு பெரியாரைக் காணச் சென்றார். "இது என்ன விலைங்க?'' என்று கேட்டார் பெரியார். "நாலணாதான்!'' என்றார் சுந்தரவடிவேலு!(அந்தக் காலத்தில் நாலணாவிற்கு மதிப்பு அதிகம்!)
பெரியாருக்குக் கோபம் வந்துவிட்டது! "எதுக்காக இந்த ஜம்பச் செலவு!....நாலணாவுக்கு வாழைப்பழம் வாங்கியிருந்தால் இரண்டு சீப்புக்கு மேல் வந்திருக்கும்! ஒரு ஆப்பிளை ஒரு ஆள் உண்ணலாம். நாலணாவுக்கு வாழைப்பழம் வாங்கினால் இருபது பேர் உண்ணக் கொடுக்கலாமே!...'' என்று கடிந்து கொண்டார்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
சங்கீத மேதை!
புகழ் பெற்ற சங்கீத மேதை மொஸார்ட்டை சந்தித்த வாலிபன் ஒருவன், "ஐயா,...சிறந்த பாடல்கள் இயற்றுவது எப்படி?'' என்று கேட்டான்.
"நீ வயதில் இளையவன். முதலில் எளிய பாடல்களை இயற்றிப் பார்'' என்றார் மொஸார்ட்.
"நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே சிறந்த பாடல்களை இயற்றவில்லையா?''
"அது சரி,....ஆனால் எப்படி பாடல்களை இயற்றுவது என்று நான் எவரையும் கேட்டுக் கொண்டிருக்கவில்லையே!''என்று புன்னகையுடன் கூறினார் மொஸார்ட்!
கே.முத்துசாமி, தொண்டி.