ஐந்து வயது நிரம்பிய அமுதன் அப்பா சொன்னதைக் கேட்கவில்லை. அதோடு சின்னச் சின்னச் சேட்டைகள் செய்தபடி இருந்தான். சொல்லிச் சொல்லிப் பார்த்தும் அவன் கேட்காததால் அப்பாவிற்குக் கோபம் வந்து விட்டது. அதனால் அப்பா அமுதனை அடித்துவிட்டார்! அடி வாங்கிய அமுதன் தேம்பித் தேம்பி அழுதான்!
"எதுக்குங்க அவனை அடிச்சீங்க....,சின்னப் பையன்...,அப்பிடித்தான் இருப்பான்....முரண்டு பிடிப்பான்....,சொன்னபடி கேட்கமாட்டான்....
நாமதான் பொறுமையா இருந்து சொல்லிக் குடுத்து அவனைப் பக்குவப் படுத்தணும்..... எந்தப் பிள்ளையையும் அடிச்சுத் திருத்த முடியாதுங்க....'' என்றாள் அம்மா. மகனை அடிப்பது தவறான செயல் என்று அப்பா உணர்ந்தார். அமுதனை இரு சக்கர வாகனத்தில் அழைத்துப்போய் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார். ஐஸ் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும்போது மகன் துள்ளிக் குதித்து சந்தோஷமாக ஓடி வந்தான்.
"அமுதனுக்கு ஐஸ் வாங்கிக் கொடுத்து சிரிக்க வெச்சிட்டேன்....பாத்தியா!...''
சட்டைக் காலரைத் தூக்கியவாறு அம்மாவிடம் பெருமை பேசினார் அப்பா.
"குழந்தைங்க கிட்ட மன்னிக்கிற குணம் மறக்கிற குணம் ரெண்டும் உண்டுங்க....நீங்க அடிச்சத மன்னிச்சு...,நொடியில் மறந்திட்டான்...இதுல உங்கள நீங்களே பராட்டிக்கிறதுல அர்த்தமில்லே....பெரிய ஆட்களை அடிச்சுட்டு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்துட்டா சமாதானம் ஆகிடுவாங்களா?...யோசிச்சுப் பாருங்க...''
அமுதனின் அம்மாவின் விளக்கம் அப்பாவை யோசிக்க வைத்தது. அன்றிலிருந்து அப்பா, அமுதனை அடிப்பதில்லை.
-செல்வகதிரவன்