கதைப் பாடல்
அழகன் என்றொரு சிறுபையன்
ஆறாம் வகுப்புப் படிப்பவனாம்
பழக இனியன் பண்பாளன்
படிப்பில் அதுபோல் படுசுட்டி.
எழுவான் படிப்பான் எழுதிடுவான்
இன்றைய பாடம் இன்றோடு
தொழுவான் அம்மா அப்பாவை
தொடர்ந்தே அவர்க்குப் பணிசெய்வான்
முதியோர் கண்டால் வணங்கிடுவான்
முடிந்த அளவில் உதவிடுவான்
எதிலும் சலிப்புக் காட்டாதான்
எதையும் முயன்று முடித்திடுவான்
ஆசிரி யர்க்கோ அவனமுதம்
அவனைப் புகழ்வர் அனைவருமே
பேசும் பேச்சில் தேன்வடியும்
பிறர்க்குத் தொல்லை தரமாட்டான்
அவனின் வகுப்பில் சுகுமாறன்
அழகன் திறமை புகழ்மீதில்
அவனுக் கெரிச்சல் நாள்தோறும்
அதனால் வெறுப்பு அழகன்மேல்
ஒருநாள் அழகன் நூலொன்றை
உருவி மறைத்தான் சுகுமாறன்
மறுநாள் தேர்வு என்றாலும்
வருந்த வில்லை அழகனுமே
மனத்தில் கல்லின் எழுத்தைப்போல்
கல்வி வைத்தத் திறமையினால்
நினைத்த வாறு தேர்வெழுதி
நின்றான் முதன்மை இடந்தன்னில்
வெட்கிப் போனான் சுகுமாறன்
வெறுப்பு என்னும் தீயோடு
நட்புக் கொண்டால் நம்மையது
நாளும் எரிக்கும் எனக்கண்டான்
தவறு செய்த சுகுமாறன்
தன்னைப் பொறுத்தான் அழகனுமே
எவரும் வியக்கும் உதவிகளை
இனிதே செய்தான் அவனுக்கு
தவற்றை உணர்ந்து திருந்துவது
தகுதி மிக்கப் பண்பாகும்
தவற்றைப் பொறுத்தே உதவுவது
தலைமை தாங்கும் பண்பாகும்.
-சின்னமணல்மேடு த.இராமலிங்கம்