விடுமுறைக் காலம் முடிந்தது
வீட்டினில் ஆட்டம் ஓய்ந்தது!
அடுத்துப் படிப்பைத் தொடர்ந்திட
ஆர்வம் எட்டிப் பார்த்தது!
கல்வி நிலையங்கள் திறந்தன!
கண்ணில் கனவுகள் விரிந்தன!
பல்வித விபரங்கள் அறிந்துமே
பலரும் புதிதாய்ச் சேர்ந்தனர்!
பழைய மாணவர் விரைந்துமே
புதிய வகுப்பில் அமர்ந்தனர்!
நுழைந்த புதியோர் அனைவரும்
நொடியில் நண்பர் ஆகிறார்!
கழிந்த நாட்கள் அனுபவம்
கதைகள் சுவையாய்ப் பேசலாம்!
பேசிய கதைகள் அனைத்தையும்
பகிர்ந்து கொண்டு மகிழலாம்!
பாட நூல்கள் புதியன!!
பயிற்றும் ஆசான் இனியவர்!
ஆடை சீராய் அமைந்திட
அழகும், பண்பும் மிளிர்ந்தது!!
திட்ட மிட்ட வகையிலே
தினமும் வகுப்பு நடைபெறும்!
கொளுத்தும் வெயிலோ, கொட்டும் மழையோ
கூர்ந்து சிறப்பாய்ப் பயிலுவோம்!
துணையாம் பெற்றவர்,...கற்றிடத்
தூண்டும் ஆசான் தெய்வமாம்!
மனதில் நிறைவு பொங்கிட
மகிழ்வாய்க் கற்போம் வாருங்கள்!
அ.கருப்பையா