இரண்டாவது ஜோசப் என்பவர் ஜெர்மெனியின் மன்னராக இருந்தார். அப்போது ஓய்வுபெற்ற ஒரு ராணுவ வீரரிடமிருந்து மன்னருக்கு ஒரு கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்தில், தனக்கு ஓய்வூதியம் வரவில்லை என்றும், தன் பத்து குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கே கஷ்டப் படுவதாகவும், எழுதியிருந்தார்.
மன்னர் அதற்கு பதில் எழுதவில்லை. நேரே அந்த வீரர் வீட்டிற்குச் சென்றார்.
அங்கு அவர் தன் குழந்தைகளுக்கு ரொட்டித் துண்டைப் பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மன்னனைக் கண்ட ராணுவவீரர், அவருக்குக் குடிக்க தண்ணீர் தந்துவிட்டு, "சற்றே அமருங்கள் மன்னா!...நான் குழந்தைகளுக்கு ரொட்டியை ஊட்டிவிட்டு வருகிறேன்'' என்று கூறினார். மன்னரும் அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தார்.
எத்தனை குழந்தைகள் சாப்பிடுகின்றன என்று எண்ணிப் பார்த்தார் மன்னர்! அங்கு பதினோரு குழந்தைகள் இருந்தன!
குழந்தைகள் பசியாறி விளையாடச் சென்று விட்டன.
"மன்னிக்க வேண்டும் மன்னா! தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...பார்த்தீர்களா! இப்படித்தான் என் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது.''
"உன் ஏழ்மை நிலையைக் கண்டேன்....அது சரி...,நீ பத்துக் குழந்தைகள் என்றுதானே எழுதியிருந்தாய்?....இங்கு பதினோரு குழந்தைகள் இருந்தனவே?''
"அதுவா?....ஒரு நாள் வாசல் கதவைத் திறந்த போது ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. யாரோ அதை அனாதையாக அதைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்....அந்தக் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்து மற்றக் குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து வருகிறேன்'' என்றார் ராணுவ வீரர்.
ஜோசப் மன்னரின் மனம் உருகியது. இந்த வறுமையிலும் இவ்வளவு உதார குணமா? என்று எண்ணி வியந்தது! வீரருக்கு ஓய்வூதியம் கொடுக்க உத்தரவிட்டதோடு அந்தப் பதினோரு குழந்தைகளின் படிப்பு, உடை, முதலியவை அரசாங்கச் செலவில் கிடைக்கும்படி ஆணையும் இட்டார்!
-ந. பரதன்