வித்தைக்காரன் தங்கமணி!
வித்தைக் காரன் தங்கமணி
வீதியில் வித்தை பல காட்டி
கவர்ந்தே இழுத்தான் கூட்டத்தை
கண்டார்....மகிழ்ந்தார் கை தட்டி!
எரியும் பந்தம் தீ வளையம்
எளிதாய் எகிறி அவன் குதித்தான்!
விரியும் இமைகள் வியப்புடனே-தரை
விரிப்பில் சேர்ந்தன நாணயங்கள்!
அவனும் எடுத்தான் புதுவளையம்-பலர்
அதனை வளைத்திட நினைத்தார்கள்!
முயன்றார் ...கம்பியின் உறுதியினை
மூச்சிரைப்பாலே அவர் உணர்ந்தார்!
அடிக்கும் உறுமியின் ஒலியுடனே-கையை
அனைவரும் தட்ட வளையத்தில் -மணி
உடலை நுழைத்து சில நொடியில்-நெளிந்து
உருவிக்கொண்டு வெளி வந்தான்!
ஒருவன் அந்தக் கூட்டத்தில்
உற்றுப் பார்த்தான் அத்திறனை!
களவே அவனது தொழிலாகும்
கார் இருள் அதற்குத் துணையாகும்!
தங்க மணியை அருகழைத்தான் -" பணம்
தருவேன் உனக்கு ஆயிரத்தில் - இரவு
வருவாய் நானும் சொல்லுமிடம் - சொல்லும்
வேலை செய்வாய் சில நிமிடம்!''
வந்தான் மணியும் நள்ளிரவு
வயிற்றில் இடுப்பில் கயிறு கட்டி
வாகாய்ச் சென்றான் மாடிக்கு! - உள்ளே
வழியில் கம்பிக் கதவொன்று! - கள்வன்
"கம்பியை வளைத்து நுழை'' என்றான்..
"கையைத் தட்டுக உறுமியுடன்....
....கம்பியை நொடியில் வளைத்திடுவேன்
காரியம் விரைவினில் முடித்திடுவேன்!''
தங்கம் சொன்னான் மணியாக - கள்வன்
தலையில் அடித்துக் கொண்டானே!
தெருவில் வந்த காவலர்கள் - இருவரையும்
இழுத்துச் சென்றனர் சிறைச்சாலை!
உழைத்து வாழ்ந்தான் நிம்மதியாய்! - ஏனோ
கயவன் கள்வன் வலை வீழ்ந்தான்!
கூடா நட்பு...., பேராசை -புதை
குழியென உணர்ந்தான் தங்கமணி!
-பூதலூர் முத்து