ஒரு சமயம் புத்தரை வணங்கிய சீடன் ஒருவன், "எங்கள் வழிகாட்டியே!......உங்களைப் போன்று சிறந்த ஞானி வேறு யார் இந்த உலகில் உள்ளார்கள்?.....உங்களைப் போன்ற கருணை யாருக்கு வரும்?....உங்களைப் போன்று அன்பு காட்ட வல்லார் எங்கு இருக்கிறார்கள்?.....தங்களைப் போன்று அருள் சுரக்கும் முகம் இவ்வுலகில் எங்குள்ளது?....தங்களைப் போன்ற பெருமைக்குரியவர்கள் யார் இருக்கக் கூடும்? நிகரில்லாக் கீர்த்தி வாய்ந்தவர் தாங்கள் ஒருவரே'' என்று மிகவும் புகழ்ந்தான்!
நேருக்குநேர் இந்த மாதிரிப் புகழ்ச்சியைக் கேட்ட புத்தருக்கு இது பிடிக்கவில்லை.
புத்தர் தன்னைப் புகழ்ந்த சீடனை நோக்கி, "சீடனே!......எனக்கு முன்பு தோன்றிய ஞானிகளைப் பற்றி நீ அறிவாயா?''
"உங்களுக்கு முன்பா?....அப்படி யாரையும் நான் அறிந்ததில்லையே!...எனக்குத் தெரியாதே!'' என்றான் சீடன்.
"இனி தோன்றப்போகும் ஞானிகள் பற்றி ஏதாவது உனக்குத் தெரியுமா?''என்று புன்னகையுடன் கேட்டார் புத்தர்.
"அவர்களைப்பற்றியும் எனக்குத் தெரியாது....தோன்றிய ஞானிகளைப் பற்றியே எனக்குத் தெரியாது!....இதில் தோன்றப் போகும் ஞானிகளைப் பற்றி நான் எப்படி அறிவேன்!'' என பதில் கூறினான் சீடன்.
"என்னைப் பற்றியாவது நீ முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறாயா?''
"உங்களை எப்படி முழுமையாக நான் அறிவேன்? இல்லை தெரியாது!'' என்று கூறினான் சீடன்.
"பிறகு எதற்கு அலங்காரமான புகழ்ச்சி வார்த்தைகளால் என்னைக் குறிப்பிட்டாய்?....அவற்றால் எந்தப் பயனும் இல்லை!'' எனறார் புத்தர்.
சீடன் எதுவும் பேச இயலாது வாயடைத்து நின்றான்.
-ஆ. குருமூர்த்தி