ஊரில் முக்கிய பிரமுகர் தர்மலிங்கம்! திடீரென்று காய்ச்சல்! மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஏகப்பட்ட நண்பர்கள்.....,உறவினர்கள்....,ஊர்க்காரர்கள் என பலரும் வந்து பார்த்துச் உடல் நலம் விசாரித்துச் சென்றார்கள். பார்க்க வந்தவர்கள் கொண்டு வந்த ஆப்பிள், சாத்துக்குடிப் பழங்கள், பிஸ்கட், ஹார்லிக்ஸ் என ஏகமாய்ச் சேர்ந்து அறை நிரம்பிவிட்டது! பின்னே ஊரில் பெரிய புள்ளியாச்சே அவர்!
வழக்கம்போல் அன்றும் தந்தை தர்மலிங்கத்தை தன் மகளுடன் பார்க்க வந்தான் ரமேஷ்!
தர்மலிங்கம் தன் மகன் ரமேஷைப் பார்த்து, "ஏம்ப்பா ரமேஷ்! இந்த பழங்கள், பிஸ்கட்,பாக்கெட்டுகள்... ஹார்லிக்ஸ் பாட்டில்கள் எல்லாத்தையும் வீட்டுக்குக் கொண்டு போ...இத்தனையும் எனக்கு செலவாகாது....நான் டிஸ்சார்ஜ் ஆக இன்னும் இரண்டு நாள் ஆகும்!....ஏகமா இருக்கு...! இன்னும் ரெண்டு நாட்கள்ளே இன்னும் சேர்ந்துடும்...எடுத்துக்கிட்டுப் போ!'' என்று கூறிவிட்டு, பேத்தியைப் புன்னகைத்துக் கொண்டே பார்த்தார். உடல் நிலை தேறியிருந்தது.
"எப்ப தாத்தா வீட்டுக்கு வருவீங்க?'' எனறு பேத்தி வினவ, "அதான் சொன்னேனே இரண்டு நாளாகும்...கவலைப் படாதே....எனக்கு உடம்பு தேறிக்கிட்டு வருது...'' என்றார் சிரித்துக் கொண்டே. ரமேஷைப் பார்த்து, "இந்த பழம், பிஸ்கட், சாமான்களை மறக்காம எடுத்துக்கிட்டுப் போ ரமேஷ்!''
சரியென அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு காரில் கிளம்பினான். குறிப்பிட்ட ஒரு இடம் வந்தபோது, "அப்பா அந்தக் கட்டடத்தின் பக்கம் காரை கொஞ்சம் நிறுத்துங்க...'' என்றான் மகள்.
அவ்வாறே நிறுத்திய ரமேஷ், "ஏனம்மா இங்கே காரை நிறுத்தச் சொன்னே?''
"அப்பா!...இங்கே இருக்கிற அனாதை விடுதியில் முதியோர்களும், ஏழைகளும் நிறைய நிறைய இருக்கிறாங்க. நம்ம நாலு பேர்களுக்கு எதுக்கப்பா இவ்வளவு பழங்களும், பிஸ்கட்டும், ஹார்லிக்ஸýம்?...இவங்களுக்குக் கொடுப்போம். அவங்களும் மகிழ்வாங்க....நமக்கும் புண்ணியம்....தாத்தாவும் சீக்கிரம் குணமடைவார்...''
மகனின் நல்ல மனதை எண்ணி நெகிழ்ந்த ரமேஷ் அவ்வாறே அங்குள்ளவர்களுக்கு பழங்களையும் ஹார்லிக்ஸ் பாட்டில்களையும் கொடுத்து மகிழ்ந்தான். பெற்றுக் கொண்டவர்களின் முகங்களிலும் மகிழ்ச்சியைக் கண்டான்!
இரா.சிவானந்தம்