தேவாலயத்தில் மணியடிக்கும் வேலை பார்க்கும் பணியாள் அவர். வயது அறுபதைக் கடந்து விட்டது. எழுதப் படிக்கத் தெரியாதவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த தேவாலயத்தில் பணி புரிந்து வருகிறவர். அந்த தேவாலயத்திற்கு புதிய பாதிரியார் பொறுப்பேற்கிறார். அவர் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவன் தேவாலயத்தில் பணியாளராக இருப்பதை விரும்பவில்லை.
ஒரு நாள் அந்த முதியவரை அழைத்து, எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும்படி சொல்கிறார். அந்த வயதில் அது சாத்தியம் இல்லை என்று முதியவர் கூறினார்.
"அப்படியானால் உனக்கு ஒரு மாத அவகாசம் தருகிறேன். அதற்குள் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லையானால் வேலையை விட்டு உன்னை நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை!'' என்று கூறி அவ்வாறே ஒரு மாதம் ஆனபின் அவரை வேலையில் இருந்து நீக்கியும் விடுகிறார்!
வேலையை விட்டு நீங்கிய தினத்தன்று மாலை வீட்டிற்குச் சென்று கொண்டு இருக்கும்போது டீ குடிக்க நினைக்கிறார் முதியவர். ஆனால் அங்கு எந்தக் கடையும் இல்லை. தன்னைப் போல பலரும் இந்தத் தெருவில் போகும்போது டீ குடிக்க எண்ணி அதற்காகக் கஷ்டப்பட்டிருப்பார்களே என்று தோன்றுகிறது.
உடனே அங்கே ஒரு டீக்கடையை ஆரம்பிக்க முடிவு செய்து சில நாட்களில் கடையை வைத்து விடுகிறார். சில ஆண்டுகளில் அவர் பல இடங்களில் பல டீக்கடைகள் வைத்து விட்டார்! நிறையப் பணம் சேர்ந்து விட்டது!
கிடைத்த பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்காக எடுத்துச் சென்றார் முதியவர். வங்கி மேலாளர் ஒரு விண்ணப்பத்தை அவரிடம் கொடுத்து, "விண்ணப்பத்தைப் படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுங்க!'' என்றார்.
"நீங்களே படித்துக் காட்டுங்க....எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது...கை நாட்டுதான்!'' என்றார் முதியவர்.
"எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலேயே பெரிய பணக்காரராகிவிட்டீங்க....! ஆச்சரியமா இருக்கு! இன்னும் எழுதப் படிக்கத் தெரிஞ்சிருந்தா எந்த அளவுக்கு உயர்ந்திருப்பீங்களோ?'' என்று வங்கி மேலாளர் கேட்டார்.
"தேவாலயத்தில் மணி அடித்துக் கொணடு இருந்திருப்பேன்!'' என்றார் முதியவர்!
(சாமர் செட் மாமின் உலகப் புகழ் பெற்ற கதை!)
நீதி: அனுபவ ஞானம் என்பது படிப்பிற்குக் குறைந்ததல்ல!
எஸ்.திருமலை