செல்வந்தர் ஒருவர் விலை உயர்ந்த குதிரை ஒன்றை வாங்கினார். அழகாக இருந்த அதன் மீது சவாரி செய்ய விரும்பினார்.
ஒவ்வொரு முறை அவர் அந்தக் குதிரையில் அமரும்போதும் அது மேலும் கீழும் துள்ளிப் பாய்ந்தது. அதனால் அவர் அடிக்கடி கீழே விழுந்தார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அவரும் பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். ஏதும் பன் விளையவில்லை.
ஏராளமான பொருள் கொடுத்து வாங்கிய அழகிய குதிரை இது. இதில் சவாரி செய்ய முடியவில்லையே என்று வருந்தினார் அவர்.
அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த செல்வந்தர் தன் சிக்கலை அவரிடம் எடுத்துச் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டார் அந்த ஞானி. செல்வந்தனிடம், ""நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்?...அதற்குத் தீனி வைக்கிறீரா....குடிக்கத் தண்ணீர் காட்டுகிறீரா?...அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டுகிறீரா?''என்று கேட்டார்.
"அதைக் குளிப்பாட்டுவதும், அதற்குத் தீனி வைப்பதும், தண்ணீர் காட்டுவதும், பராமரிப்பதும் என் வேலையாட்களின் வேலை. அதற்குத்தான் ஆள் வைத்திருக்கிறேனே!...
சவாரி செய்ய மட்டும்தான் நான் அதை அழைத்துக்கொண்டு வெளியே செல்வேன். எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று கேட்டார் செல்வந்தர்.
""நாளை முதல் குதிரையுடன் நீர் அதிக நேரத்தைச் செலவு செய்யுங்கள். உங்கள் கைகளாலேயே அதற்கு உணவையும், தண்ணீரையும் கொடுங்கள். அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள்!....உங்கள் அன்பை அதனிடம் காட்டுங்கள்.அன்பினால் எல்லாம் நடக்கும்!'' என்று சொல்லி செல்வந்தனை அனுப்பி வைத்தார் ஞானி.
அவர் சொன்னபடியே செய்தார் செல்வந்தர். அவர் அன்பில் திளைத்தது குதிரை.
அதன் பிறகு அந்தக் குதிரை அவர் சவாரி செய்யும்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரை மகிழ்ச்சியுடன் சுமந்து சென்றது.
இப்போது அவர் அந்த ஞானிக்கு நன்றி செலுத்த குதிரையில்தான் சென்று கொண்டிருக்கிறார்.
-ஆர். மகாதேவன்