இசையின் மகிமை!
ஒரு பிச்சைக்காரன் மொர்ட்டிடம் யாசகம் கேட்டான். அப்போது அவரிடம் பணமில்லை. அங்கேயே ஓர் இசை அமைத்து, அதைக் காகிதத்தில் எழுதி அவனிடம் தந்தார். ஓர் இசைக்கூடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கே கொண்டு போய்க் கொடு. பணம் தருவார்கள்'' என்றார். பிச்சைக்காரன் அவ்வாறே செய்ய கை நிறையப் பணம் தந்தார்கள்.
ந.பரதன், ஏரல்.
பயம்!
ஐசன்ஹோவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்கு முன் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். அப்போது ஒரு பேராசிரியர் ஐசன்ஹோவரிடம், ""நீங்கள் இங்கே வருவதற்கு முன் நாங்கள் எவ்வளவு பயந்து கொண்டிருந்தோம் தெரியுமா?'' என வெட்கத்தோடு சொன்னார்.
ஐசன்ஹோவர் சிரித்துக் கொண்டே, ""அப்படியா?....இங்கே வருவதற்கு முன் உங்களைப் பற்றி நான் எவ்வளவு பயந்து கொண்டிருந்தேன் தெரியுமா?'' என்றார்.
ஆர்.அஜிதா, கம்பம்.
நன்கொடை!
அயர்லாந்தில் ஒரு புதிய அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக 2000 டாலரை ஹென்றி போர்டு கொடுத்தார். இச்செய்தி மறுநாள் நாளிதழ்களில் 20,000 டாலர் என வெளியாகி இருந்தது. ""தவறுதலாக ஒரு பூஜ்யம் சேர்க்கப்பட்டு செய்தி வெளியாகிவிட்டது'' என்று அனாதை இல்ல இயக்குனர் ஃபோர்டிடம் மன்னிப்புக் கேட்டார்.
"எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்?...மீதி 18000 டாலருக்கான காசோலை இந்தாருங்கள்'' என அளித்தார் ஃபோர்டு!
மு.ரியானா, கம்பம்.