முட்டாளால் தாமதம்!
ஒருமுறை ஒரு நண்பருடன் அண்ணாமலை செட்டியார் உலாவச் சென்றார். சிறிது தூரம் சென்றதும் நண்பர் முன்னால் சென்றுவிட, அண்ணாமலை செட்டியார் பின் தங்கி விட்டார். நண்பர் திரும்பிப் பார்க்க அண்ணாமலை வேகமாக வந்து நண்பருடன் சேர்ந்து கொண்டார். "ஏன் பின் தங்கி விட்டீர்கள்?'' என்று கேட்டார் நண்பர். அதற்கு அண்ணாமலை, ""முட்டாளுடன் வந்ததால் தாமதம்!'' என்றார்.
"என்ன?....முட்டாளுடனா? என திடுக்கிட்டார் நண்பர்! அதற்கு அண்ணாமலையார், " முள் தாளுடன் வந்தேன்.... அதாவது முள் தைத்த தாளுடன் வந்தேன்!... அதனால் தாமதமாயிற்று!'' என்றார். அவரது சிலேடை நயத்தை எண்ணி மகிழ்ந்தார் நண்பர்.
கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்.
வேலை நேரம்!
லியானார்டோ டாவின்ஸி ஓவியத்தை வரைவதை நிறுத்தி விட்டு அதை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இது அவரது வழக்கம். சற்று நேரம் கழித்து அதை மெருகேற்றுவார். அப்படி அவர் ஓவியத்தை பாதியில் நிறுத்திவிட்டு சும்மா நிற்பது மாதா கோயிலில் இருந்த பாதிரியார் ஒருவருக்குப் பிடிக்கவில்லை! ஒரு நாள் டாவின்ஸியிடம், ""வேலையை பாதியில் நிறுத்திவிட்டு ஏன் சும்மா நிற்கிறீர்?'' என்று கேட்டார்.
""சும்மா நிற்கும்போதுதான் நான் ரொம்ப வேலை செய்கிறேன்!'' என்றார் டாவின்ஸி!
ஆதினமிளகி வீரசிகாமணி.
பேச்சால் கிடைத்த உதவி!
சமூகத்தில் நற்பெயரும், மதிப்பும் பெற்றவர் ஹார்டின்! அவர் ஒரு வள்ளலும் கூட! அவரிடம் ஒருவர், "உங்களால் எப்படி இவ்வளவு நற்பெயர் எடுக்க முடிந்தது?'' என்று கேட்டார். அதற்கு, ""முதலில் என்னைச் சுற்றியுள்ளோர் எனது பெருமைகளைக் கூறிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். எனது குறைகளையும, தவறுகளையும் எனக்குக் கேட்காதபடி மறைக்க முயன்றனர். பிறகு நான் காது கேட்காதவன் போல் நடிக்கத் தொடங்கினேன். அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்த பலர் நாளடைவில் என் முன்னேயே என் குறைகளையும், தவறுகளையும் சத்தமாக பேச ஆரம்பித்து விட்டனர். எனது குறைகளையும், தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கு அவர்களின் பேச்சு மிக உதவியாக இருந்தது!'' இதுதான் நான் நல்ல பெயர் எடுக்கக் காரணம்!'' என்றார் ஹார்டின்! வியந்தார் கேள்வி கேட்டவர்!
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.