சோலைமலைக்குத் திரும்பிய ஞானம் தொண்டுக்கே பிறந்த மெர்ஸியின் இனிய நினைவிலேயே இருந்தது.
மாந்தோப்புக்கு வந்ததும் பிள்ளைகளிடம் ஒருகேள்வி கேட்டது.
""உலகத்தில் உயர்ந்தது எது?''
""இமயமலை....எவரெஸ்ட் சிகரம்!''
""எவருக்கும் எட்டாத வானம்!''
""சூரியன்!''
""எல்லாமே நல்ல பதில்தான்....வேறு உள்ளதா?''
""உள்ளதே!....அன்பு!'' என்றான் ரகுமான்!
""பலே பாண்டயா!''
""பிறரைப் பாராட்டும்போது பாரதியார் உணர்வோடு இப்படிச் சொல்வாராம்....தங்கமணியிடம் ஞானம் பெற்ற தகவல்.
""அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிருள்ள உடம்பு!....அன்பு இல்லாதவர் உடம்பு எலும்பைத் தோல் போர்த்தியுள்ள வெற்று உடம்பே!...'' என்று சொன்னது யார்?...''
""தெரியுமே!....வள்ளுவர்....அக்கா அந்தக் குறளும் எனக்குத் தெரியும்!...'' பீட்டரின் குரல்....
""அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்புதோல் போர்த்திய உடம்பு.''
பீட்டர் குறளைப் போற்றியது ஞானத்துக்கு ஆனந்தமாய் இருந்தது!
""அன்பை யாராவது பார்த்தது உண்டா?''
""ஓ!....எங்கள் தெருவில் அன்பு என்ற பையன் இருக்கிறான். நான் தினம் பார்ப்பேன்....'' மேரி சொன்னாள்.
எல்லோரும் சிரித்தார்கள்.
"" மேரி சொன்னது சரி....அன்பை நாம் பார்க்க முடியாது....ஏனென்றால் அது ஒரு குணம்....பண்பு....பாசத்தின் மலர்ச்சி.....கருணையின் வெளிப்பாடு.....அது மனிதர்
களின் செயல்மூலம் தானே தெரியும்!''
""கிளியக்கா....எங்க வீட்டுத் தாழ்வாரத்திலே ரெண்டு சிட்டுக்குருவிங்க கூடு கட்டியிருக்கு....முட்டையிலேயிருந்து குஞ்சும் வந்திருக்கு.... அம்மா குருவியும் அப்பா குருவியும் பூச்சி புழுவைக் கொண்டு வந்து ஊட்டுது....எவ்வளவு பாசம் பாரு!....இது அன்புதானே!....''
""நான் அரிசி....கம்பு....தண்ணீர் சின்னக் கிண்ணத்திலே வைப்பேன்.....அரியைக் கொத்தித் தின்பதும்....நீரைக் குடிப்பதும் எவ்வளவு அழகு தெரியுமா? குருவிக் குடும்பத்தைக் கொஞ்சணும் போல இருக்கு.......பக்கத்தில் அணிலும் விளையாடும்!....எல்லாம் நட்பாகவே இருக்கு.....அதிலே பூக்கள்....,வண்டுகள்....,அங்கே குருவிங்களோட இனிய ஓசை கேட்கும்...''
""சொல்லும்போதே மேரிக்கு எவ்வளவு மகிழ்ச்சி பாருங்க....இதுதான் அன்பினால் கிடைக்கும் இன்பம்....செல்வம் எல்லாம்!''
ஞானத்தின் சொற்களில் மேரிக்கான பாராட்டும் இருந்தது.
கிளி வரும்...